மீண்டுமோர் பொன்னான வாய்ப்பு

26-07-2008
வேலுப்பிள்ளை பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்
கிளிநொச்சி

அன்புடைய தம்பி,

மீண்டுமோர் பொன்னான வாய்ப்பு

எனது கடிதங்கள் எதையும் நீர் இதுவரை பொருட்படுத்தவில்லை. நீர் உட்பட மக்களுக்கு தேவையான அமைதியை கொடுக்கக்கூடிய இனப்பிச்சனைக்கு ஓர் நிரந்தரமான தீர்வை எட்டக்கூடிய ஒரு பொன்னான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென்பதை உமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இக் கடிதத்தை எழுதுகிறேன். எமது நாட்டையும் அதன் மக்களையும் அழிவிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன். உமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள மக்களை விடுவிக்க வேண்டிய தார்மீக கடமை எனக்குண்டு. கிளிநொச்சி மக்களோடு வாழ்ந்து வளர்ந்து அம் மக்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி கிராமசபை தலைவராகவும், கிளிநொச்சியின் நகரசபையின் முதல் தலைவராகவும் பணியாற்றியதை நீர் அறிவீர். ஆகவே வன்னிப்பகுதி மக்கள் மீது எனது அக்கறை எவ்வளவு என்பதையும் நீர் விளங்கிக் கொள்வீர். தினமும் அரிய உயிர்கள் யுத்தகளத்தில் இழக்கப்படுகின்ற அதேவேளை உமது போராளிகளால் பிரயாணிகளின் பேரூந்துகள், படையினரின் பேரூந்துகள், புகையிரதம் ஆகியன கிளேமார், கண்ணிவெடி, கைக்குண்டு, குண்டு ஆகியவற்றால் இலக்கு வைக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் தாக்குதல்களிலும் பலர் உயிர் இழக்கின்றனர். எரியும் பேரூந்துகளிலிருந்து அதிஷ்டவசமாக தப்பியோடும் அப்பாவிகளையும், சேனை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள ஏழை அப்பாவிகளையும் உமது போராளிகள் விட்டு வைக்கவில்லை. காரியாலயத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சிறுவர், சிறுமியர், கர்ப்பிணிகள், முதியோர் ஆகிய இவர்களும் இதில் அடங்குவர். உமது அர்த்தமற்ற எவருக்கும் எதுவித பிரயோசனமும் தராத யுத்தத்தால் 70 ஆயிரம் தொடக்கம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பலிகொள்ளப்பட்டுள்ளன. அனேகர் தமது கணவரையோ, மனைவியையோ பிரதான உழைப்பாளியையோ இழந்துள்ளனர். சிலர் கண் பார்வையும், கை கால்களையும் இழந்துள்ளனர். உம்மால் உருவாக்கப்பட்ட அநாதைகள் குறைந்த எண்ணிக்கையல்ல. பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் எத்தனை பேரை பலி எடுத்துள்ளீர்? தமது முன்னாள் பிரதமரை கொடூரமாக படுகொலை செய்தமையை இந்தியா என்றும் மன்னிக்குமா? பல சமூகத்தையும் சேர்ந்த பல்வேறு தலைவர்களை நீர் படுகொலை செய்தமையை இலங்கை மக்கள் மன்னிப்பார்களா? உம்மால் படுகொலை செய்யப்பட்டவர்களின் பிள்ளைகள் உம்மை மன்னிப்பார்களா? உம்மால் அழிக்கப்பட்ட பல பல கோடி பெறுமதியான தனியார், பொது சொத்துக்கள் பற்றி என்ன கூறுகிறீர்? உம்மால் அழிக்கப்பட்ட, ரயில்பெட்டிகள். எஞ்ஜின்கள், பஸ்கள், தொலைபேசி கம்பங்கள், மின்சார கம்பங்கள் கேபிள்கள், என்பவற்றின் பெறுமதி என்ன? தலைமன்னார் தொடக்கம் மதவாச்சி, காங்கேசன்துறை தொடக்கம் வவுனியா, மட்டக்களப்பு பாதையிலும் மொத்தம் 200 கி.மீ தூரத்திற்கு மேற்பட்ட பாதையில் தண்டவாளங்கள், சிலிப்பர் கட்டைகள், கற்கள் எதையும் நீர் விட்டுவைக்கவில்லை. பல வருட காலமாக பிள்ளைகள் குப்பி விளக்கு வெளிச்சத்திலும், நிலவு வெளிச்சத்திலும் படிக்க விட்டீர். ஆறு மணித்தியால நேரத்தில் கொழும்புக்கு வர வேண்டிய நேரத்தை 36-48 மணி நேரம் வரை நீடிக்க வைத்துவிட்டீர். மக்களை பட்டினி போட்டீர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு பெரும் தொகையான மக்கள் இடம்பெயரும் போது இறந்தவர்கள் எததனை பேர்? சுதந்திரமாக வாழ்ந்த மக்களுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக கூறி அவர்களை அடிமைப்படுத்தினீர் வடக்கு கிழக்கு பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு இனியும் இழப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. ஏழைகள் படு ஏழைகளாகவும:, பணக்காரர் பிச்சைக்காரர்களாகவும் ஆக்கப்பட்டனர். பல லட்சக்கணக்கான மக்கள் தங்க ஆபரணங்கள், வீடுகள் உட்பட அத்தனையையும் இழந்தனர். சிலர் கணவன்மாரை இழந்தனர், பலர் தம் பிள்ளைகளை இழந்தனர். ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகளை நீர் பலாத்காரமாக பிடித்துச் சென்று அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துவிட்டு அவர்களை மனித குண்டுகளாக்கி அவர்களின் உடல்களை சிதற வைத்தீர். இவை அனைத்தும் தமிழ், முஸ்லீம் மக்கள் பட்ட துன்பத்தில் ஒரு சிறு பகுதியே. அகதி முகாம்களில் முஸ்லீம் சகோதரர்கள் பலர் 15 ஆண்டுகளுக்கு மேல் வாடுகின்றனர். அதேபோல சில தமிழர்களும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்கு கொடுக்கும் பெரும் வேதனை இத்தனை துன்பங்களை அனுபவித்த பின்பும் ஆங்கிலத்தால் எழுதக்கூடிய சில சிங்கள எழுத்தாளர்கள் என்றோ மறைந்து போன சீதனப் பிரச்சனை, சாதிப் பிரச்சினைப் பற்றி கூறுவதாகும். சிலர் நான் எவரிடமும் காணாத யாழ்ப்பாண மக்களின் உயரிய பாகுபாடு மனப்பான்மை பற்றிப் பேசுகின்றனர். இன்று யாழ்ப்பாணத்து மக்கள் மிகக் கீழ்மையான நிலையில் இருந்து கொண்டு அனுதாபத்துக்கும் ஆதரவுக்கும் ஆளாகியுள்ளனர்.இதைத் தவிர ஓர் சாதாரண சிங்கள மகனை சட்டத்திற்கு பயந்த நல்லடக்கமும், மரியாதையுள்ள மனிதனாகத்தான் நான் காண்கிறேன். அவர்கள் தமிழ் மக்கள் மீது எந்தவிதமான விரோதமும் காட்டுவதில்லை. தமிழர்கNhடு சம உரிமையுடன் வாழ விரும்புகின்றனர். தென்னிலங்கையில் வாழ்கின்ற அரைவாசிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் மீது முழு அனுதாபத்துடனும் நட்புடனும் சமாதானமாகவும், அமைதியாகவும் உமது கட்டுப்பாட்டில் இருந்தபோது வாழ்ந்த நிலையிலும் பார்க்க மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்கின்றனர்.

தயவு செய்து உமது நடவடிக்கைகள் அத்தனைiயும் நிறுத்தவும். யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் அமைந்திருந்த சிங்கள மகா வித்தியாலயங்களில் ஆயிரக்கணக்கான சிங்கள மாணவர்கள் கல்வி கற்றனர். சிங்களப் பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான தமிழ் பாடசாலைகள் அன்றும் இருந்தன. இன்றும் இருக்கின்றன. அன்று எங்கும் சமாதானம் நிலவியது. யாழ் மாநகர சபையில் சிங்கள உறுப்பினர்களும், முஸ்லீம் மேயர்களும் இருந்திருக்கின்றனர். சிங்களவர், தமிழர், முஸ்லீம் மக்கள் மத்தியில் எதுவித முரண்பாடுகளும் இருக்கவில்லை. நாம் சமாதானமாகவே வாழ்ந்தோம். நாடு முழுவதும் பல்வேறு உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ் அங்கத்தவர்கள், உப தலைவர்கள், தலைவர்கள் அனேகர் பணியாற்றுகின்றனர். 1983 ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம் நாட்டின் வரலாற்றில் ஒரு கறுப்பு புள்ளியே. அது திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட ஒரு செயலாகும். இன்றும் நாடு முழுவதிலும் பல்லின மக்களும் பூரண சமாதானமாக வாழ்கின்றனர். தமிழர்கள் இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை. உமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களை அழிவை நோக்கி அழைத்துச் செல்கிறீர். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த மக்களில் அரைவாசி பேர் இன்று இல்லை. இந்த வருடம் மட்டும் யுத்த முனையில் 5000 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களை நீர் பலி கொடுத்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சிங்களவரோ, தமிழரோ, முஸ்லீம்களோ எவரிலும் ஓர் உயிரைத்தானும் இனி இழக்க நாம் தயாரில்லை. நம் இலங்கையரே தவிர உலகம் பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளது. உமது நடவடிக்கைகள் தமிழ் மக்களின் முன்னேற்றத்தை பூரணமாகவும், சிங்கள, முஸ்லீம் மக்களின் முன்னேற்றத்தையும் பெருமளவிலும் பாதித்துள்ளது.

இதோ மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பு உம்மை தேடி வருகிறது

இந்த வாய்ப்பு ஆண்டவனால் அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பை இறுகப் பற்றிக்கொளளவும்;. கொழும்பில் விரைவில் கூடவுள்ள சார்க் நாடுகளின் மாநாட்டில் சார்க் நாட்டுத் தலைவர்கள் ஒன்று கூடி தத்தம் நாடுகளிலுள்ள பிரச்சினைகள் பற்றி சந்தித்து பேசவுள்ளனர். அதில் மிக முக்கிய பிரச்சினை பயங்கரவாதப் பிரச்சினையாகும். எனது கருத்தின்படி நீர் ஒருவர் மட்டும் தீர்மானித்தால் பயங்கரவாதத்தை ஒரு நாளைக்குள் அற்றுப் போகச் செய்யலாம். சார்க் மாநாட்டு நேரம் உமது ஒருதலைபட்சமான யுத்த நிறுத்தத்தை பெரும் கேலிக்கூத்தாகவே எடுத்துக் கொள்வர். என்னுடைய ஆலோசனையை ஏற்று பின்வரும் ஐந்து பிரகடனங்களை உடனடியாக மேற்கொள்வீரானால் சார்க் நாடுகளின் தலைவர்கள் உட்பட அனைவரும் எமது பிரச்சினையில்அக்கறை கொள்வர். சார்க் மாநாட்டுத் தலைவர்களுக்கு இலங்கை இனப்பிரச்சினையிலும் பார்க்க வேறு முக்கிய பிரச்சினை இருக்குமென்று நான் நம்பவில்லை. ஆகவே அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையின் இனப்பிரச்சினை இடம்பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. எது எப்படியிருப்பினும் பயங்கரவாதம் விவாதிக்கப்படவிருக்கும் ஒரு விடயமாக இருப்பதால் எமது இனப்பிரச்சினையும் விவாதிக்கப்படலாம். ஆகவே பின்வரும் பிரகடனத்தை செய்யுமாறு உம்மை கேட்டுக் கொள்கிறேன்.

01. ஒருதலைபட்சமாக ஓர் நிரந்தர போர்நிறுத்தத்தை பிரகடனப்படுத்தி இலங்கை அரசையும் அவ்வாறு செய்ய கோரவும்,

02. இறுதியாக இனப்பிரச்சினை தீரும் வரை ஆயுதத்தை எந்தவிதத்திலும் உபயோகிக்கமாட்டேன் என்று கூறி ஆயுதத்தை கீழே வைப்பதாகவும்,

03. பிரிவினை கோரிக்கையை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காண சம்மதிப்பதாகவும்,

04. சார்க் நாட்டுத் தலைவர்களை மத்தியஸ்தர்களாக ஏற்பதாகவும்,

05. சார்க் நாட்டு தலைவர்களின் சிபாரிசை தீர்வாக ஏற்பதாகவும்

பிரகடனப்படுத்தவும். சர்வதேச சமூகம் முற்று முழுதாக உமது தனிநாட்டுக் கோரிக்கையை நிராகரித்திருப்பதை நீர் அறிவீர். பிரிவினை கோரிக்கையை கைவிட சம்மதிக்கும் பட்சத்தில் முழு உலகும், குறிப்பாக சார்க் நாடுகள் இந்தியாவின் தலைமையில் எமது பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவ முற்படுவர். இது ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதற்கு நல்லதோர் வாய்ப்பாகும். நீர் ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதற்கு கிழக்கு மாகாணத்தில் நடப்பவையை நல்ல முன்னுதாரணமாக கொள்ளலாம். நிர்வாகத்தில் பங்கு கொள்வதற்கு உமக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும். என்னைப் பொறுத்தவரையில் நீர் ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதற்கு வேண்டிய சகல உதவியையும் மேற்கொள்ள முடியும். இந்த விடயத்தில் நிர்வாகத்தில் பங்கெடுப்பது உட்பட நான் எந்தவித நன்மையையும் பெறப்போவதில்லை. நாட்டின் கடும் போக்காளர்கள்கூட தமது நிலைப்பாட்டை மாற்றி திருப்திகரமான தீர்வை காண மகிழ்ச்சியுடன் ஒத்துழைப்பர் என்பதை நம்பிக்கையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எமது இனப்பிரச்சினை சார்க் உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறுமா என்பது தெரியாது. ஆனால் நிச்சயமாக பயங்கரவாதம் ஒரு நிகழ்ச்சியாக இருப்பதால் இனப்பிரச்சினை பற்றி பேசுவது தவிர்க்க முடியாததாகும்.

ஆகவே எனது ஆலோசனையை ஏற்று உமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும். அதேநேரம் இனப்பிரச்சினை சம்பந்தமாக சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பேச வேண்டுமென்று ஜனாதிபதி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.; கொள்கிறேன்.



இப்படிக்கு
அன்புடன்


வீ. ஆனந்தசங்கரி
தலைவர் – த.வி.கூ