விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை

23-08-2005
மேன்மை தங்கிய ஜனாதிபதி
திருமதி.சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா

அன்புடையீர்
விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை

விடுதலைப்புலிகள் அரசுடன் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க இருப்பதாகவும் அரசு அதற்குரிய ஆயத்தங்களை செய்வதாகவும் அறிகிறேன் இச்செய்தி சர்வ தேச சமூகம் உட்பட அனைவருக்கும் மகிழ்ச்சி தருவதாக இருப்பினும் எனது அபிப்பிராயத்தின் படி வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை விடுதலைப்புலிகள் தான் கொலை செய்தனர் என்ற குற்றச் சாட்டிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என விமர்சிக்கப்படலாம். ஆகவே இப் பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கு முன்பு சில முக்கியவிடயங்கள் பேசித் தீர்க்கப்படாமை நியாயமற்ற செயலாகும். பேச்சுவார்த்தைக்கு முன் தீர்க்கப்பட வேண்டிய சில விடயங்கள் பின்வருமாறு:

அமைச்சர் திரு. கதிர்காமரின் கொலைக்கும் தமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லையென்று விடுதலைப்புலிகள் வழமைபோல் மறுத்துள்ளனர்.இவர்கள் தினமும் தமக்கு எதிர்ரானவர்களையோ அல்லது அரசாங்க உளவுத்துறையினர் ஒருவரையோ கொலை செய்து வருகின்றனர். சர்வதேச சமூகத்தின் கண்டணங்களையும் பொருட்படுத்தாது தொடரும் விடுதலைப்புலிகளின் கொலைகள் மேலும் தொடராது என்ற வாக்குறுதியைப் பெற்ற பின்பே பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்.

உலகளாவிய கண்டணங்களையும் மீறி ஏழைப்பிள்ளைகளையும் மற்றும் சுனாமியால் பாதிகப்பட்டோரின் பிள்ளைகளையும் கட்டாயத்தின் பேரில் புலிகள் போராளிகளாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இதை ஆட்சேபிக்காத பட்சத்தில் புலிகள் சிறுவர்களை தமது படையில் சேர்த்து கொள்ளப் போவதில்லையென உத்தரவாதம் தராதவிடத்து அரசு பேச்சுவார்த்தைக்கு போவது என்பது மிக கொடூருமான செயலாகும்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் உறவினர்களைச் சந்திப்பதற்கு நாடு திரும்பும் போது பிற நாட்டில் வாழ்ந்த காலப்பகுதிக்கு நாளொன்றிற்கு ஒரு பவுண் அல்லது அதற்கு சமமான பணத்தை வரியாக செலுத்தும்படி வற்புறுத்துகின்றனர். இந்த நடவடிக்கையை கைவிடு வதாக சம்மதிக்கும் வரை பேச்சு வார்த்தை ஆரம்பிக்கபடக் கூடாது.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மாவட்ட நிர்வாகத்தில் தலையிடுவதை நிறுத்தி அரச ஊழியர்கள் சுதந்திரமாக செயற்படவிடுவதற்கு உத்தரவாதம் தரும் வரை பேச்சு வார்த்தை ஆரம்பிக்கபடக் கூடாது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தடுப்பு முகாம்கள் சித்திரைவதை முகாம்கள் இருட்டறை மறியல்சாலைகள் போன்றவற்றில் பலர் மனித உரிமைகள் மீறப்பட்ட முறையில் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகின்றனர். அனுசரணையாளர்களே இரும்புத்திரை என்று வர்ணிக்கப்படுகின்ற இப்பகுதிக்குப் போவது தடுக்கப்பட்டுள்ளமையால் பேச்சு வார்த்தை ஆரம்பிப்பதற்கு முன்பு சர்வதேச சமூகப் பிரதிநிதிகளோ அல்லது சர்வதேச மன்னிப்புச் சபை உறுப்பினர்களோ அல்லது மனித உரிமை அமைப்புகளோ சென்று இப்பகுதிகளை பார்வையிட விடுதலைப்புலிகள் அனுமதிக்க வேண்டும்.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு விடுதலைப்புலிகளின் பிரவேசம் அரசியல் பணிகளுக்காகவே அனுமதிக்கப்பட்டது.ஆனால் அரசியற் பணியைத்தவிர தம் இஸ்டம் போல் விடுதலைப் புலிகள் செயற்படுகின்றனர். அரசியற் பணியை மட்டும் செய்வோம் என்றும் பொது மக்களின் சக வாழ்வில் தலையிட மாட்டோம் என்றும் விடுதலைப் புலிகள் உத்தரவாதம் வழங்கும் வரை பேச்சு வார்த்தை ஆரம்பிக்கப்படக் கூடாது.

மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு இன்று வரை எதுவித முன்னேற்றமும் காணப்படவில்லை. ஆனால் இவ் யுத்த நிறுத்தம் அரசுகட்டுப்பாட்டுப் பகுதியை பெருமளவு தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும் தமது கட்டுப்பாட்டு பகுதியில் தாம் ஏற்படுத்திய சர்வதிகார ஆட்சிக்கு சட்ட அதிகாரம் பெறவுமே உதவியது. ஆகவே பழைய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை இரத்து செய்து காலவரையறை விதித்து புதியதோர் ஒப்பந்தம் செய்தல் அவசியமாகும்.

இறுதியாக விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை சர்வதேச சமூகமும் நன்கறிந்துள்ளது என சுட்டி காட்ட விரும்புகிறேன். தாம் செய்த கொலைகளை, குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் கொலையால் தமக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவை சமாளிக்க இந்த சந்தர்ப்பத்தை விடுதலைப் புலிகள் பாவிக்க அனுமதிக்கக் கூடாது. தயவு செய்து எனது வேண்டுகோளை கருத்திற் கொண்டு விடுதலைப் புலிகளால் சொல்லமுடியாத துன்பத்தை அனுபவித்துவரும் அப்பாவி தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்திக் கொடுக்குமாறு வேண்டுகிறேன்.


தங்கள் விசுவாசமுள்ள


வீ.ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைப் கூட்டனி