கொள்கை பிரகடனமும் சமாதான நடவடிக்கையும்

28-11-2005
மான்புமிகு மகிந்த ராஜபக்ஷ அவர்கள்
ஜனாதிபதி செயலகம்
கொழும்பு

அன்புடையீர்,

கொள்கை பிரகடனமும் சமாதான நடவடிக்கையும்

இலங்கையின் ஜனாதிபதியாக தாங்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கு எனது பாராட்டுதல்களை முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் இருவரும் 1970ம் ஆண்டு ஏக காலத்தில் பாராளுமன்றம் சென்றோம். சபை உறுப்பினர்களில் மிகவும் இளவயதினராகிய தங்களுக்கு கௌரவ ஸ்டான்லி திலகரட்னா அவர்களை சபாநாயகராக பிரேரிக்கும் கௌரவம் கிடைத்தது. பாராளுமன்றத்தில் சமகாலத்தில் இருந்த போதும் வயதால் நான் உங்களிலும் பார்க்க 12 ஆண்டுகள் மூத்தவர் என்ற காரணத்தால் 25ம் திகதி பாராளுமன்றத்தில் தாங்கள் ஆற்றிய கொள்கை பிரகடன உரையில் தங்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் சில மாறுபட்ட கருத்துக்களை நான் கூற விரும்புகிறேன். வழமைபோல் கடந்தகால ஜனாதிபதிகள் நவீன இலங்கையை கட்டியெழுப்ப அனைவரினதும் உதவியை வேண்டியது போல் தாங்களும் கேட்டுள்ளீர்கள். அதிருப்தியுடன் வாழும் சிறுபான்மை மக்களின் ஒத்துழைப்பை பெறாது அந்த இலக்கை அடைவது மிகவும் கடினமானதாகும். பெரும்பான்மை சிங்கள மக்களின் முழு ஒத்துழைப்பு கூட தங்களுக்கு கிடைக்காது போகலாம். ஏனெனில் இன்று இலங்கை மக்களின் ஒரே குறிக்கோள் சமாதானத்தை பெறுவதே. அதை அடைவதற்கு நியாயமான ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு அவசியமானதாகும்.

சமாதானம் எமது வீட்டுப்படிவரை வந்துள்ளவேளை அதை ஏற்பதா அன்றி நிராகரிப்பதா என்பது தங்களிடமே தங்கியுள்ளது. பிரிவினையை ஆதரிக்காத சர்வதேச சமூகத்துக்கு ஏற்புடையதான ஐக்கிய இலங்கைக்குள் ஒர் நியாயமான தீர்வை முன்வைத்துவிட்டு புதிய இலங்கையை உருவாக்கும் பணிக்கு நீங்கள ஆதரவு திரட்டலாம். அதுவரை நீங்கள் எதை இலவசமாக கொடுப்பினும் சிறுபான்மை இனத்தினர் எதிலும் அக்கறைக்காட்ட மாட்டார்கள். இதை தெளிவாக கூறின் விடுதலைப் புலிகள் அவர்களை எதற்கும் அனுமதிக்கமாட்டார்கள். திருப்திகரமான சமிக்ஞை தங்கள் பக்கத்தில் இருந்து வரும்வரை எதற்கும் விடுதலைப் புலிகளின் அழுத்தத்திற்கு கட்டுப்பட்டு ஒடுங்கி வாழ்வதை தவிர வேறு வழியில்லை.

அனேகர் எண்ணுவது போல் ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினரின் ஆட்சியல்ல. சிறுபான்மையினரின் ஒத்தாசையுடன் பெரும்பான்மையினரால் நடாத்தப்படுவதே உண்மையான ஜனநாயகமாகும். ஆங்கில அகராதி ஜனநாயகத்துக்கு பின்வருமாறு விளக்கம் தருகிறது. ஜனநாயகம் என்பது நேரடியாக அல்லது பிரதிநிதிகள் மூலமாக எல்லா மக்களாலும் நடத்தப்படும் அரசாகும். - பாரம்பரிய பிரிவுகள் அற்ற சமுதாயம் - சிறுபான்மையினரின் கருத்துக்கு மதிப்பளித்தல் போன்றவையாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பெற்ற அத்தனை வாக்குகளும் தங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகள் அல்ல, என்ற தங்களின் கூற்றை நானும் ஏற்றுக் கொள்கிறேன். எம் மத்தியில் நிரந்தர அதிருப்தியுடன் வாழும் சிறுபான்மை மக்கள் குறிப்பாக தமிழ், முஸ்லீம் மக்களோடு இணைந்து எவ்வாறு புதிய இலங்கையை உருவாக்கப் போகிறீர்கள்?

ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சி முறையை உருவாக்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கூறிய கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு 49 வீதமான மக்களின் வாக்குகள் கிடைத்துள்ளது. இதே சமஷ்டி தீர்வு முறையை தங்களுடைய கட்சியாகிய SLFP கட்சியும் ஏற்றுக்கொண்டுள்ளது. இடதுசாரி கட்சிகள் தங்களுக்கு வாக்களித்ததாக தாங்கள் ஏற்றுக் கொண்டால் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை அமுல்ப்படுத்த தங்களுக்கு அமோகமான மக்கள் ஆணை கிடைத்துள்ளது எனக் கொள்ளலாம். இது சமஷ்டி அடிப்படையிலான தீர்வை அமுல்ப்படுத்த மக்களுடைய கருத்துக் கணிப்புக்கும், அரசியல்சாசன திருத்தத்துக்கும் வேண்டிய மூன்றில் இரண்டு தேவைக்கு போதுமானதாகும். எனது கருத்தை ஏற்றுக் கொள்ளாது போனாலும்கூட சமஷ்டி கொள்கையை ஆதரித்த 49 வீதமான மக்களை இலகுவாக புறக்கணிக்க முடியாது.

ஜாதிக ஹெல உருமய கட்சியையோ அல்லது ஜே.வி.பி யையோ நான் தனிமைப்படுத்தவில்லை. இவ்விரு கட்சித் தலைவர்களுடன் நான் பலசுற்று பேச்சுக்கள் நடத்தியுள்ளதால் இவ்விரு கட்சிகளின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார காலத்தில் ஜாதிக ஹெல உருமய தாம் இந்திய முறையிலான அதிகார பகிர்வை ஏற்பதாக கூறியுள்ளனர். இவ்விடயத்தை தங்களின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளேன். ஜே.வி.பி கூட விடுதலைப் புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடும் பட்சத்தில் தமது தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதாக கூறியுள்ளனர். ஜே.வி.பி யின் பொதுச் செயலாளர் திரு. ரில்வின் சில்வா அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை கீழே தருகிறேன். இந்த சந்தர்ப்பத்தில் கூறுவது பொருத்தமானதாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

“இனப்பிரச்சினையில் எல்லா பிரிவினைரையம் ஒன்று சேர்த்து பொதுவானதொரு தீர்வை எடுக்க வேண்டிய பொறுப்பை இன்றைய இளைய சமூகத்தினர் ஏற்க வேண்டும். நாளுக்கு நாள் இனப்பிரச்சினை தீர்வுக்கு சமஷ்டி முறையே சிறந்தது என்ற கருத்து மக்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது. இனப்பிரச்சினை தீர்வுக்கு 50 ஆண்டுகளில் முதற் தடவையாக பிரதான அரசியல் கட்சிகள் சமஷ்டி முறையை தீர்வாக தேர்தல் பிரச்சாரத்தில் முன் வைத்துள்ளன. ஐ.தே.க, எஸ்.எல்.எப்.பி ஆகியவை ஏற்கனவே தமது முடிவை அறிவித்துள்ளன. இடதுசாரி கட்சிகள் என்றும் இந்தக் கருத்தையே ஆதரித்து வந்துள்ளன. ஜாதிக ஹெல உருமய கூட இந்திய முறையை ஏற்பதாக தெரிகிறது. தங்களுடைய கட்சியாகிய ஜே.வி.பி கூட விடுதலைப் புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டால் மறு பரிசீலனை செய்வதாக கூறியுள்ளது.

இந்திய முறையிலான அதிகாரப்பகிர்வு இலங்கையின் பல்வேறு தர மக்களுக்கு ஏற்புடையதாக தோன்றுகிறது. சரித்திரத்தில் பெரும் தவறை செய்ததாக இல்லாமல் ஜே.வி.பி யும் நல்லதோர் தீர்வை எடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் விரைவில் ஒரு தீர்வு ஏற்படுவதையே விரும்புவதால் ஒன்றுபட்ட தீர்வு எடுக்கப்படின் ஜனாதிபதி தேர்தலின் பின் ஏனைய விபரங்களை பேசித் தீர்த்துக் கொள்ளலாம். பிரிவினையை நடைமுறைப்படுத்த முடியாது என விடுதலைப் புலிகள் உணர்ந்து அக் கோரிக்கையை அவர்கள் கைவிட வேண்டும். சர்வதேச சமூகமோ, இந்தியாவோ பிரிவினையை ஏற்கப் போவதில்லை. இந்தியாவின் இந்த எதிர்ப்பு இத்தகைய பிரிவினை கோரிக்கை தமது நாட்டிலும் எழாது தவிர்ப்பதற்குமாகும் எனக் கருதுகிறேன். சமஷ்டி முறை நாட்டுப் பிரிவினைக்கு வழிகோலாது என உறுதியாக கூறுகிறேன். அதற்கு மாறாக நாட்டை ஒற்றுமைப்படுத்த அது உதவும். ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண்பதையே தாம் விரும்புவதாக சர்வதேச சமூகமும் தெளிவாகக் கூறியுள்ளது.”

நாட்டின் பொது நன்மை கருதி அனைவரும் விரும்பும் சமாதானத்தை இந்திய முறையிலான அதிகாரப் பகிர்வை ஜே.வி.பி யை ஏற்க வைக்க முடியுமென நான் வலுவாக நம்புகிறேன். 25 மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியா பிரிவினையை பற்றி பேசுவதில்லை. தமது ஆட்சி முறையை சமஷ்டியோ, ஒற்றையாட்சியோ என்று கூட அவர்கள் அலட்டிக் கொள்வதில்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டை இந்தியர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தியா உட்பட சர்வதேச சமூகம் பிரிவினையை ஆதரிக்கப் போவதில்லை என்று பல தடவைகள் கூறியுள்ளன. எமது பெரும் அயல் நாடான இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை நாம் புறக்கணிக்க முடியாது. இதை விடுதலைப் புலிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இனப்பிரச்சினைத்தீர்வுக்கு தங்களுக்கு கிடைத்துள்ள பெரும் மக்கள் ஆணையும் பிரிவினையை தடுப்பதற்கான உத்தரவாதமும், துணிச்சலான முன்னெடுப்புக்கு தங்களுக்கு உதவும். மேலும் பேச்சுவார்த்தையை காலம் கடத்துவது புத்திசாலித்தனம் அல்ல. பிரச்சினை என்ன? அதற்குத் தீர்வு என்ன? என்பதை நாம் அறிந்ததே. விடுதலைப் புலிகள் தமது பிரிவினைக் கொள்கையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. நியாயமற்ற விஷமத்தனமான பிரச்சாரத்தையே உலகம் முழுவதிலும் மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையிலும் பிற நாடுகளிலும் வாழும் சிறார்கள் மூளை சலவை செய்யப்படுகிறார்கள். பெரும் எதிர்ப்பின்றி உலகிலுள்ள சகல தமிழ் ஊடகங்கள் அவர்களின கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன. ஒற்றையாட்சி, கூட்டாட்சி, சமஷ்டி ஆகிய வார்த்தைகளில் தொங்கிக்கொண்டு சமாதான முயற்சியை தாமதப் படுத்துவதன் மூலம் சர்வதேச சமூகத்துக்கு அதிருப்தி ஏற்பட்டு விடுதலைப் புலிகளால் செய்யப்படும் அரசுக்கு விரோதமான பிரச்சாரங்களை கண்டும் காணாமலும் இருக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்தும் கூட விடுதலைப் புலிகள் பல்வேறு நாடுகளில் எம் மக்களிடம் பலாத்காரம், அச்சுறுத்தல் மூலம் பெருந்தொகையான பணத்தை சேகரிக்கின்றனர். பிரதிபலிப்புக்கு பயந்து யாரும் அதிகாரிகளிடம் முறையிடுவதில்லை. அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளுர் சட்டங்களை மீறி பணம் சேர்க்கும் வழிமுறைகளை கையாளும் பல்வேறு அமைப்புக்கள் இயங்குகின்றன. பல நாடுகள் தம் மக்களின் நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை. அடிப்படை உரிமைகளில் தலையிடுவதாக குற்றம் சுமத்தப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆகவே அரசு நியாயமான தீர்வை எடுப்பதற்கு விசுவாசமாக செயல்படுகின்றது என்பதை உலகுக்கு தெரியப்படுத்தினால்தான் சர்வதேச சமூகம் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும். எமது பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர்களுடன் நாம் ஒத்துழைக்காவிட்டால் அவர்கள் ஏன் எம்மைப்பற்றி கவலைப்பட வேண்டும்?

இனப்பிரச்சினை ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1956ம் ஆண்டு தனி சிங்களச்சட்டம் உருவாக்கப்பட்ட போது ஆரம்பித்த இனப்பிரச்சினை பண்டா- செல்வா ஒப்பந்தத்தின் மூலம் தீர்த்திருக்க முடியும். 10 ஆண்டுகளின் பின் டட்லி-செல்வா ஒப்பந்தம் மூலம் தீர்வு கண்டிருக்க முடியும். 1996 ம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா அவர்களால் முன்வைக்கப்பட்ட அரசியல் யாப்பு மூலம் தீர்த்திருக்க முடியும். முதல் தடவையாக சமஷ்டி முறையில் தீர்வு காணும் ஆலோசனை கடந்த தேர்தலில்தான் முன்வைக்கப்பட்டுள்ளது. தங்களுடைய அமைப்புக்குள் உள்ள தடைகளை தாண்டி செயல்படுவீர்களானால் இந்திய முறையிலான தீர்வை முழு நாட்டின் ஒத்துழைப்போடு அடைய முடியும்.

இந்த நிலைப்பாட்டை நான் எடுப்பதால் எனக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை தாங்கள் அறிவீர்கள். எனது ஆலோசனை இந்த நாட்டினதும், மக்களினதும் அமைதியிலும், முன்னேற்றத்திலும் சகலரும், சம உரிமையுடன் வாழ வேண்டும் என்ற நல்லெண்ணமும் கொண்ட ஒருவரால் முன் வைக்கப்படுவதாக நீங்கள் ஏற்றுக் கொண்டால் எதுவித தாமதமுமின்றி மக்களின் உற்சாகம் குறையு முன்பு இப் பிரச்சினைத் தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதம் பாதகமாக முடியும். ஆகவே உடன் செயற்படுங்கள். மக்களின் முழு ஆதரவும் தங்களுக்கு உண்டு.

தங்களை சந்தித்து மேலும் சில விபரங்களை தர விரும்புகிறேன்.

இப்படிக்கு
அன்புடன்


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- தமிழர் விடுதலைக் கூட்டணி