வட மாகாணத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட விசேட செயலணி குழு

26-05-2008
மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் .
அலரி மாளிகை
கொழும்பு-03

வட மாகாணத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட விசேட செயலணி குழு - பாகம் -01

கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் வட மாகாணத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட விசேட செயலணி குழுவை அமைத்தமைக்கு தங்களுக்குரிய கௌரவத்தை கொடுத்து எனது கடும் ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்கிறேன். அதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டிய உரிமையும், நாட்டின் நலன் கருதிய கடமைப்பாடும் எனக்குண்டு. அவ்வாறு செய்வதற்கு நியாயப்படுத்தக்கூடிய காரணங்கள் பல என்னிடம் உண்டு. எனது ஆட்சேபனை தாமதமாகியமைக்கு கிழக்கு மாகாண பிரச்சினைகளில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தமையும் எனது ஆட்சேபனைக்குரிய ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் கௌரவ டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியின் முக்கிய உறுப்பினராகிய செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் படுகொலையும் காரணங்களாகும்.

எதிர்காலத்தில் மீண்டும் ஒரு போராட்டத்தை தொடர இடமளிக்காது எமது இனப்பிரச்சனைக்கு ஓர் நிரந்தர தீர்வே எமக்கு வேண்டும். 50 ஆண்டுகளுக்கு மேல் ஒற்றையாட்சியின் கீழ் காண முடியாத ஓர் தீர்வு இத்தனை உயிரழிவுகளுக்கும், சொத்தழிவுகளுக்கும் பின் காண முடியும் என நான் திடமாக நம்பவில்லை. இதன் காரணமாகவே நான் சமஷ்டி முறையிலான ஓர் தீர்வை ஆதரிப்பதோடு அதற்கு மாறாக இந்திய முறையிலான தீர்வை மட்டும் ஆதரித்து வருவது தாங்கள் அறிந்ததே. கடந்த நான்கு ஆண்டுகளாக பல தரப்பட்டவர்களுடன் எனது பிரேரணையை விவாதித்த போது அதிகமானவர்களுக்கு அது ஏற்புடையதாக இருந்ததை அறிந்து கொண்டேன். இதைத் தவிர நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தையும், சமாதானத்தையும், சகஜ வாழ்க்கையையும் ஏற்படுத்துவதோடு ஒன்றுபட்ட இலங்கைக்குள் பல்லின மக்கள் மத்தியில் சமத்துவத்தையும், நல்லெண்ணத்தையும் ஏற்படுத்த வேண்டிய கடமைப்பாடு எமக்குண்டு. நம் நாட்டின் முதல் தேவைகள் இவையே. இதுவே மக்களினதும், சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புமாகும். ஆனால் கௌரவ டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாடு வேறுபட்டதும், வட பகுதி மக்களுக்கு ஏற்புடையதல்ல என்பதோடு ஏனைய பகுதிகளில் வாழும் மக்களுக்கும் வேறுபட்ட கருத்திருக்க முடியாது என்பதே எனது நிலைப்பாடாகும். மேலும் அவரும் அவரின் சகாக்களும் 1990 ம் ஆண்டு முற்பகுதியில் தீவகத்தை தம் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட காலத்திலிருந்து அவர்களின் செயற்பாடுகள் சர்வாதிகாரப் போக்குக் கொண்டிருந்தமையால் வட பகுதி மக்களை மீட்டெடுக்கும் பணியை அவர்களிடம் விட்டுவிட முடியாது. மாற்றுக் கட்சியினரை தேர்தல் காலத்தில் ஆதரவு தேடும் உரிமையை மறுத்தும், பெருமளவில் ஆள் மாறாட்டம் செய்தும் பாராளுமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் புதிய ஓர் கலாச்சாரத்தை நம் நாட்டில் ஏற்படுத்தியவர்கள் அவர்களே. ஜனநாயக பாராம்பரியத்துக்கு அவர்கள் ஏற்படுத்திய பாதிப்பு விடுதலைப் புலிகளினால் ஏற்பட்டதிலும் பார்க்கக் கூடியதாகும்.

ஜனநாயக கோட்பாடுகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் மதிப்பு கொடுத்து வந்தது. பொதுஜன வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தின் காலத்தை 1983 ஆம் ஆண்டு அரசு நீடித்த போது தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த 17 பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் எவ்வாறு அதை ஆட்சேபித்து எமது பதவிகளைத் துறந்தோம் என்பதை தாங்கள் அறிவீர்கள். உலக யுத்தகாலம் தவிர்ந்த வேறு எந்தக் காலத்திலும், எந்த ஜனநாயக நாட்டிலும் இவ்வாறு செய்யும் வழக்கம் இல்லை. இவ்வாறு பதவி துறந்த எங்கள் 17 பேரையும் அரசியல் சாசனத்தில் ஆறாவது திருத்தத்தைக் கொண்டு வந்து வேண்டுமென்றே எம்மை பாராளுமன்றம் செல்ல விடாது தடுத்து, மிதவாதிகளிடமிருந்த தமிழ் மக்களின் தலைமையை பறித்தெடுத்து ஆயுதக் குழுக்களிடம் கையளித்தார் கௌரவ ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்கள். எதிர்கட்சியினர் 6 வருடங்களின் பின் மக்களிடம் ஆணை பெறும் உரிமையை மறுத்து நியாயமற்ற முறையில் மக்களின் புதிய ஆணையை பெறாது மேலும் 6 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். 6 ஆண்டுகள் மட்டும் ஆளும் மக்கள் ஆணை பெற்ற ஓர் கட்சி நியாயமற்ற முறையில் 12 ஆண்டுகள் ஆட்சி நடாத்தியது. நாடளாவிய ரீதியில் சுதந்திரமானதும், நியாயமானதுமான ஒரு தேர்தல் 1977 ஆம் ஆண்டின் பின் இன்று வரை இலங்கையில் நடைபெறவில்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்றைய இந்த நிலைமை பெருமளவு உருவாக காரணமாக இருந்தது வடக்கு கிழக்கு என்பதோடு அதற்குப் பெரும் பங்களிப்புச் செய்தது கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களே.

இந்தக் குழுவினர் 1994ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாக போட்டியிட்டு 9 ஆசனங்களை பெற்றனர். அத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட இக் குழுவைச் சேர்ந்த 13 வேட்பாளர்களும் 10 தேர்தல் தொகுதிகளில் மொத்தமாக பெற்ற வாக்குகள் 175 மட்டுமே. ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் அவர்கள் மாற்றுக் கட்சியினர் எவரையும் நியமனத் திகதியிலிருந்தே அத் தொகுதியில் கால் வைக்க விடாது மிக மோசமான முறையில் ஆள் மாறாட்டம் செய்து 8638 வாக்குகளை மட்டும் பெற்றிருந்தனர். இவர்கள் அத் தேர்தல் மாவட்டத்தில் 596,366 வாக்காளர்கள் இருந்தும் மிகப் பிழையான முறையில் மிகக் குறைந்த வாக்குகளை பெற்றபோது அரசு அரசியல் சாசனத்தையோ அன்றி தேர்தல் சட்டத்தையோ மாற்றம் செய்து பரிகாரம் செய்யும் என்று எதிர்பார்த்திருந்தேன். இதற்குரிய பரிகாரத்தை அரசு அன்று செய்திருந்தால் இன்று பொதுமக்களை அன்றி விடுதலைப்புலிகளை மட்டும் பாராராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் 22 த.தே.கூ உறுப்பினர்கள் தெரிவாகியிருக்க மாட்டார்கள். அடுத்தடுத்து ஆட்சியை கைப்பற்றிய கட்சிகள் இவ்வாறு தெரிவாகும் தமிழ் சிறுபான்மை கட்சி உறுப்பினர்களை தமது தேவைகளுக்கு உபயோகித்து ஆட்சியை பிடிக்க அல்லது நீடிக்க செய்தமை துரதிஷ்டவசமானதே. கடந்த காலத்தில் சில சுயநலமிக்க தலைவர்கள் நாட்டுப் பற்று இன்றி செய்த பாவத்தினாலேயே நம் முழு நாடும் இன்று இவ்வாறு அல்லல் படுகின்றது.

இந்த நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற த.வி.கூ ஆற்றிய பெரும் பங்களிப்பை முழு உலகும் மிகவும் பாராட்டியது. ஆனால் துரதிஷ்டவசமாக அந்தத் தலைமுறையைச் சேர்ந்த தலைவர்கள் இப்போது இல்லை. அவர்களில் சிலர் கொல்லப்பட்டனர். சிலர் மரணி;த்து விட்டனர். மற்றும் சிலர் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர். அத்தகைய பழைய தலைவர்களில் இன்றும் அரசியலில் ஈடுபாட்டுடன் இருக்கும் இருவரில் ஒருவர் த.வி.கூ உருவாக்கிய நற்பெயரை அழித்துவிட்டு, என்னை மட்டும் தன்னந்தனியாக எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வைத்துவிட்டு, தான் மோசடி மூலம் பாராளுமன்றம் சென்று விட்டார். எம் தலைவர்கள் காட்டிய வழியிலிருந்து நான் தவறவில்லை. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக நான் எதிர்நோக்கிய தர்ம சங்கடமான நிலைமையும் அவமானங்களும் சொல்லில் அடங்கா. உலகளாவிய ரீதியில் பிரசுரமாகும் விடுதலைப் புலிகள் சார்பான பல கையடக்கப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் எனக்குக் கொடுத்து எழுதும் அடைமொழிகள் கீழத்தரமானவையும், அவதூறானவையுமாகும். அவர்கள் பாவிக்கும் வார்த்தைகள் என் மனதை மிகவும் புண்பட வைத்தன. நான் யாருக்கும் அடிவருடியாக செயல்பட்டவன் அல்ல. கறுப்பை கறுப்பு என தயங்காது கூறுபவன். எப்போதும் நடுநிலைமையை வகிப்பவன். இருப்பினும் இத்தகைய அவமானங்களை சகிப்பதற்குக் காரணம் நான் என் நாட்டை மிகவும் நேசிப்பதோடு நாட்டுப் பற்றற்ற ஜனநாயக விரோத சக்திகளிடமிருந்து நாடு விடுதலை பெற வேண்டும் என்பதாலேயே. பயங்கரவாதத்தை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் உங்கள் பணிக்கு எனது பூரண ஒத்துழைப்பு உண்டு. அந்தப் பணிக்காக என் உயிரையும் தர நான் தயாராக உள்ளேன். ஆனால் வட பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் விடுதலைப் புலிகள் மட்டும்தான் என எண்ணாதீர்கள். கிழக்கு மாகாண மக்களைப் போல் வட பகுதி மக்களும் போதியளவு துன்பப்பட்டு விட்டார்கள். போதியளவு இழந்தும் விட்டார்கள். தொடர்ந்து நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் வாழ்கின்றார்கள். அவர்கள் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியிலிருந்து நெருப்புக்குள் பாயும் நிலைமைக்கு தள்ளப்பட கூடாது. எதிர்வரும் ஜூலை 15 இல் எனக்கு 75 வயது பூர்த்தியாகிவிடும். எனக்கு ஏதாவது நடக்கும் முன்பு நம் நாட்டில் வாழும் ஒவ்வொரு பகுதியினரும் அடிமைத்தனத்திலும், நிரந்தர பயபீதியிலும், பல ஆண்டு காலமாக அனுபவிக்கும் வேதனைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதே.

எனது எதிர்ப்பு விசேட செயலணி குழுவின் அமைப்புக்கும் அக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் ஆகிய இரண்டுக்குமே. ஏற்கனவே அனுபவிக்கும் மந்திரி பதவியோடு இக்குழுவின் தலைவராக தங்களால் தெரிவு செய்யப்பட்ட கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் செயற்பாடுகள் பற்றி நான் பலதடவை தங்களுக்கு புகார் செய்துள்ளேன். அவரின் மந்திரி பதவி நாட்டுக்கு ஏற்கனவே பாதகமானதும், அரசுக்கு அவர் ஆற்றும் தொண்டுக்கு அப் பதவி மிகவும் போதுமானதுமாகும் ஏனைய இரு உறுப்பினர்கள் பற்றி அவர்களுக்கு வேலைப்பளு கூடி விட்டது என்பதைத் தவிர வேறு எந்த எதிர்ப்பும் கிடையாது. இக் குழுவில் பணியாற்ற போதிய நேரம் இருக்காது. இவ்விருவரும் முதல் கூட்டத்துக்கே சமூகம் கொடுக்காதமை இறுதியில் இதுவொரு தனி மனிதனின் அமைப்பாக விளங்கப் போகின்றது என்ற எனது சந்தேகத்தையும் ஈ.பி.டி.பி இயக்கத்தின் அண்மைக்கால வரலாறு அப்பாவி தமிழ் மக்களுக்கு மாறாக மீண்டும் அரங்கேறப் போகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. சந்தர்ப்பம் கிடைத்தால் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவாகள் என்ன செய்வார் என நானறியேன். வடக்கின் அபிவிருத்திக்கு பதிலாக தன் சொந்த நலனுக்காக இப் பதவியை பாவிக்கமாட்டார் என்று கூற முடியாது. சுயநலன் கருதி செயற்பட இவரைச் சுற்றி ஒரு கூட்டம் உண்டு. ஆனால் இவருடைய பணிக்கு பொது மக்களிடமிருந்து எதுவித ஒத்துழைப்பும் கிடைக்கப் போவதில்லை. தலைவர்களை மக்களே தெரிவு செய்ய வேண்டுமே அன்றி தலைவர்களை மக்கள் மீது திணிக்கக் கூடாது.

அவருடன் 1994ம் ஆண்டு தொடக்கம் 14 ஆண்டுகளுக்கு மேல் இணைந்து செயற்பட்டும், அமைச்சரவையில் இருவரும் அங்கத்துவம் வகித்த போதும் இவரைப் பற்றியோ இவரின் கடந்தகால நடவடிக்கைகள் பற்றியோ நீங்கள் அறியாதிருப்பது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. இவர் கட்டுப்படுத்தத் தவறிய இவர்களுடைய போராளிகளுடைய மகிழ்ச்சி தராத நடவடிக்கைகளை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர வேண்டிய கடமைப்பாடு எனக்குண்டு.

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் விடுதலைப் புலிகள் இவர்களை மிஞ்சி செயற்பட்டமையால் இவர்களுக்கு ஒரேயொரு ஆசனம் மட்டும் கிடைத்தது. ஈ.பி.டி.பி யினருக்கும் எங்களுக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்கின்ற உரிமை மறுக்கப்பட்டது. ஈ.பி.டி.பி தமது கடந்தகால அனுபவங்களை வைத்து ஓர் ஆசனத்தை எப்படியோ வென்று விட்டது. அதற்கு முன்பு நடைபெற்ற 2001 பொதுத் தேர்தலில் பிரச்சாரத்துக்காக வேலணைக்குச் சென்ற த.வி.கூ தொண்டர்களை ஈ.பி.டி.பி யினர் வழி மறித்து துவக்குகளாலும், ஆயுதங்களாலும் தாக்கினர். இரு தொண்டர்கள் ஸ்தலத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டனர். மற்றும் அனேகர் படுகாயமுற்றனர். ஈ.பி.டி.பி யினர் என்னை எங்கே எங்கே எனக் கேட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். திரு. எஸ். சோனாதிராஜா தலையில் வெட்டுக் காயமும், திரு. எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களின காலும் முறிக்கப்பட்டது. அதற்கு முன் 2000ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள தனது ஸ்ரீதர் தியேட்டர் காரியாலயத்தில் கௌரவ டக்ளஸ் தேவானந்தா இருந்து கொண்டு ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை அதே வீதியில் அமைந்திருந்த எனது காரியாலயத்துக்கு ஆர்பாட்டம் செய்யுமாறு அனுப்பியிருந்தார். பலர் குடிபோதையில் இருந்தனர். எனக்கு எதிரான சுலோகங்களுடன், எனது கொடும்பாவியை எரித்து காரியாலய பெயர் பலகையையும் உடைத்து விட்டுச் சென்றனர். இவ்வாறான பயமுறுத்தல், பயமுறுத்தி சம்மதிக்க வைப்பதும் தேர்தல் குற்றங்களாகும். தேர்தல் சட்டத்துக்கும் முரணானதாகும். இருந்தும் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சர் என்ற காரணத்தினால் பொலிசாரும், இராணுவத்தினரும் எதுவும் செய்ய முடியாத நிலையில் செயலற்று நின்றனர். இப்பொழுது விசேட செயலணி குழு தலைவராக செயற்படும் இவ் வேளையில் அரச ஊழியர்கள் அனேகரை தன் தேர்தல் பிரச்சாரத்திற்கு உபயோகிப்பாரேயானால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் அரச ஊழியர்கள் முதல் நாள் மாலையிலிருந்தே இவருக்காக செயற்பட ஆரம்பித்து விட்டனர். ஈ.பி.டி.பி இனருக்கும் அவர்களிடம் பல விடயங்களை கற்றுக் கொண்ட விடுதலைப் புலிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை.

வெளிநாட்டு தூதுவர்களுக்கு 2000ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் திகதி ஈ.பி.டி.பி யினரிடமிருந்து ஊர்காவற்துறை மக்களை விடுவிக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிய கடித்தின் ஒரு பகுதியை கீழே குறிப்பிடுகின்றேன். “இன்றைய நிலையில் நான் அறிந்த வரையில் ஒவ்வொருவரினதும் கடமை ஊர்காவற்துறை தொகுதி மக்களை குறிப்பாக நெடுந்தீவு மக்களை விடுவிப்பதே. 4100 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட ஊர்காவற்துறையின் ஒரு பகுதியாகிய நெடுந்தீவு இராணுவம், பொலிஸ், கடற்படை ஆகியோர்; கடமையாற்ற இல்லாத வேளையில் அரச சார்பான ஈ.பி.டி.பி என்ற இயக்கம் அப் பகுதி முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது. கடந்த சில வருடங்களாக அப் பகுதி மக்கள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகி;ன்றனர். 1999ம் ஆண்டு நடந்தேறிய ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க க்கு வாக்களித்தவர்களை ஈ.பி.டி.பி யினர் கடுமையாக அடித்துத் துன்புறுத்தினர். உதவி அரசாங்க அதிபருடைய பெயர் தற்போது பிரதேச செயலளர் என மாற்றம் பெற்றுள்ளது. அப் பகுதி அரசாங்க நிர்வாகத்துக்கு அவரே பொறுப்பாக இருந்தார். சில வருடங்களுக்கு முன்பு நெடுந்தீவில் கடமையாற்றிய பிரதேச செயலாளர் ஈ.பி.டி.பி யினரால் அடித்துக் கொல்லப்பட்டார். அரசு இன்று வரைக்கும் அதற்கொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தக் குடும்பத்தினருக்கு எந்தவித நட்ட ஈடும் வழங்கவில்லை. அடித்துக் கொல்லப்பட்டவரின் பெயர் நிக்லஸ் ஆகும்”

இரு வருடங்களுக்கு முன்பு ஈ.பி.டி.பி யினர் சுருவில் என்ற இடத்தில் மற்றொரு இளைஞரை சுட்டுக் கொன்றனர். இது சம்பந்தமாக நான்கு ஈ.பி.டி.பி இனர் மீது ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. சந்தேக பேர்வழிகள் நெடுந்தீவுக்கு தப்பிச் சென்ற வேளையில் நீதிபதியினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருநதது. பிடியாணையை அமுல்படுத்த முடியாதவேளை காரைநகர் கடற்படை அதிகாரியை நீதிபதி விசாரணை செய்தபோது தனக்கு நெடுந்தீவுக்கு போக அதிகாரம் இல்லையென ஆதாரத்தோடு கூறியிருந்தார். அந்த விடயம் அந்த நீதவானின் இடமாற்றத்தோடு முடிந்து விட்டது. ஜனாதிபதி அவர்களே தாங்கள் உட்பட எவரேனும் நெடுந்தீவுக்கு போவதாக இருப்பின் ஈ.பி.டி.பி யினருடைய அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.

ஊர்காவற்துறை தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் ஈ.பி.டி.பி யினருடைய ஆயுதம் தாங்கியோர் பல்வேறு முகாம்களை அமைந்திருந்தனர். அப் பகுதி அப்பாவி மக்கள் அவர்களின் அதிகாரத்துக்குட்பட்டே வாழ்கின்றனர். ஒரேயொரு வித்தியாசம் என்னவெனில் அப் பகுதியிலுள்ள கடற்படையினர் புலிகளிடமிருந்து ஈ.பி.டி.பி யினரை பாதுகாப்பதும் ஈ.பி.டி.பி யினரிடருந்து பொது மக்களை பாதுகாப்பதும் அவர்களுடைய கடமையாக இருந்தது. இருப்பினும் ஈ.பி.டி.பி யினரின் அட்டகாசத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. இதில் வேடிக்கை என்னவெனில் நெடுந்தீவு உட்பட ஈ.பி.டி.பி யினருக்கு ஊர்காவற்துறையில் எந்த வேலையும் இருக்கவில்லை. அவர்களுடைய ஆயுதக் குழுவினர் அப்பாவி மக்களை மிரட்டுவதும், பீதியடையச் செய்வதிலுமே ஈடுபட்டிருந்திருந்தனர்.

அரசாங்கம் மக்களின் ஒரு பகுதியினரை ஒரு ஆயுதக் குழு ஏன் துன்புறுத்த அனுமதிக்கின்றது என கேள்வியை எழுப்பலாம். பதில் மிகவும் இலகுவானதே. ஊர்காவற்துறை தொகுதியில் இவ்வாறு பெற்ற வாக்குகளால்தான் 1994ம் ஆண்டுத் தேர்தலில் ஈ.பி.டி.பி இனர் 9 ஆசனங்களை கைப்பற்ற முடிந்தது. இன விகிதாசார அடிப்படையில் யாழ் தேர்தல் மாவட்டத்தின் 11 தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இந்த 11 தொகுதிகளில் ஊர்காவற்துறை தொகுதி ஈ.பி.டி.பி இன் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. ஏனைய 10 தொகுதிகளும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகும். அதன் விளைவாக 10 தொகுதிகளில் வாக்கெடுப்பு நடைபெறவில்லை. ஊhகாவற்துறையை முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஈ.பி.டி.பி 10 ஆசனங்களில் 9 ஐ பெற்றுக் கொண்டது. இதற்கு அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் 10 தொகுதிகளிலும் மொத்தமாக 175 மட்டுமே. ஊர்காவற்துறை தொகுதியில் ஏறக்குறைய 9000 வாக்குகளை பெற்றனர். அதைக்கூட தேர்தல் மோசடி மூலம் பெற்றதாக கண்காணிப்புக்குழு கூறியிருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லீம் மக்களின் சில ஆயிரம் வாக்குகளால் ஸ்ரீ.ல.மு.கா ஒரு ஆசனத்தை பெற்றது.

இவ்விடயத்தை மீண்டும் பரிசீலிப்பதற்கு போதிய விடயங்களை தந்துள்ளதாக கருதுகிறேன். ஈ.பி.டி.பி இனர் முன்பு செயற்பட்டது போல் இனியும் செய்யமாட்டார்கள் என்று எத்தகைய உத்தரவாதத்தை அரசு கொடு;க்கும் என வட பகுதி மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர். முன்பு அவர்களிடமிருந்தது ஒரு மாவட்டம். இப்போது அவரிடம் கொடுக்கப்பட்டிருப்பது ஒரு மாகாணமாகும் மற்றும் அனேகரைப் போல் நானும் முற்று முழுதாக இப் பிரச்சினையை மறு பரிசீலனை செய்யவேண்டிய நிலை ஏற்படலாம். இந் நடவடிக்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. ஆதற்கு மாறாக இனப்பிரச்சினையை மேலும் விரிவடையச் செய்து பொது மக்களை விடுதலைப் புலிகளை நோக்கி விரட்டிவிடும் நிலை ஏற்படலாம் என கருதுகிறேன். எனது விளக்கத்தால் தாங்கள் திருப்தி அடையாதிருந்தால் மேலும் சில விடயங்களை இக் கடிதத்தின் இரண்டாம் பாகமாக விரைவில் அனுப்பி வைப்பேன்.

இப்படிக்கு
அன்புள்ள


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ