வட மாகாணத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட விசேட செயலணி குழு

27-05-2008
மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள்
அலரி மாளிகை
கொழும்பு-03

வட மாகாணத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட விசேட செயலணி குழு - பாகம் -02

இக் கடிதத்திற்கும் இதற்கு முதற் பாகமாக என்னால் அனுப்பப்பட்ட நேற்றைய கடிதத்திற்கும் விளக்கம் தர கடமைப்பட்டுள்ளேன். விடயம் அவசரமானதும், முக்கியமானதுமானதும் ஆகையால் அதை படித்துப் பார்க்க சொற்ப நேரம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீது எதுவித விரோதமும் கிடையாது. ஊர்காவற்துறை மக்களிடம் ஈ.பி.டி.பி போராளிகள் நடந்து கொண்ட கொடூரமான செயல்கள் இன்னும் மக்கள் மனதை விட்டு அகலவில்லை. அவை மீண்டும் எதிர்காலத்தில் மக்கள் மீது பிரயோகிக்கப்பட மாட்டாது என்பதற்கு எதுவித உத்தரவாதமும் இல்லை. நயினாதீவு என அழைக்கப்படும் நாகதீப உட்பட ஊர்காவற்துறை தொகுதி 09 தீவுகளை உள்ளடக்கியதாகும். இக் கடிதம் வேறு இரு கடிதங்களின் சில முக்கிய பகுதிகளை மட்டும் கொண்டுள்ளது. ஆனால் இத்துடன் இணைக்கபட்டுள்ள கடிதங்களை முழுதாகப் படித்து ஆராய்ந்து பார்ப்பீர்களேயானால் அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களை தலைவராக கொண்டு இயங்கும் விசேட செயலணி குழு எத்தகைய ஆபத்தான முடிவை எதிர்நோக்கும் என்பதை வெளிச்சமிட்டு காட்டுகின்றன. அவ்விரு கடிதங்களும் நான் த.வி.கூ பாராளுமன்றகுழு தலைவராகவும், கட்சியின் சிரேஷ்ட உப தலைவராகவும் செயற்பட்ட காலத்தில் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா அவர்களுக்கு கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் செயல்முறை பற்றி முறையிட்ட கடிதமாகும். இத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்ற அதன் பிரதி (19-02-2001) இச் சந்தர்ப்பத்தில் பொருத்தமானதாக இருக்கும்.

ஜ“இத்தகைய சம்பவங்களை நாட்டின் எப்பகுதியிலும் ஏற்றுக்கொள்வார்களா? மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே இதை சிங்கள, முஸ்லீம் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? இவ்வாறு செய்வதற்கு தமிழ் மக்களை மட்டும் ஏன் தெரிவு செய்தீர்கள். இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்குண்டு அல்லவா? ஒரு கௌரவமான குடும்பத்தில் பிறந்த கண்ணியமான ஒரு பெண்மணியை இந்த நாட்டின் தலைவியாக பெற நாடு அதிஷ்டம் பெற்றதாக மக்கள் கருதினர். தங்கள் கணவர் படுகொலை செய்யப்பட்டவேளை தாங்களும், தங்கள் பிள்ளைகளும் பட்ட துயரை நாமறிவோம்;. என்னைப் போன்ற பல மக்கள் உங்கள் துயரத்தில் பங்கு கொண்டனர். படுகொலை செய்யப்பட்ட உதவி அரசாங்க அதிபர் அவர்களின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஏற்பட்ட உணர்வு தாங்கள் கணவரை இழந்தவேளை ஏற்பட்ட உணர்வுக்கு வேறுபட்டதல்ல. ஒரேயொரு வித்தியாசம் உங்களுக்காக குரல் கொடுக்க பலர் இருந்தார்கள். அவர்களுக்காக பேச அநேகமாக நான் மட்டுமே.

உண்மையாகத்தான் கேட்கிறேன் ஜனாதிபதி அவர்களே உங்களின் ஆட்சிக்கு உட்பட்ட ஒருபகுதி மக்கள் மீது இழைக்கப்படுகின்ற கொடுமைகளை நீங்கள் அறிவீர்களா இல்லையா?. நீங்கள் அறிவீர்கள் என பெருமளவில் மக்கள் நம்புகின்றார்கள். இவற்றை நீங்கள் அறிந்திருந்தால் ஜனாதிபதி அவர்களே இந்தக் கட்டத்திலேனும் தயவு செய்து தலையிடுங்கள். புத்த பகவானின் பேரால் தங்களுக்கு இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்.

ஈ.பி.டி.பி தலைவர் அவர்களை நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு மட்டுமல்ல வடகிழக்கு மக்களுக்கு முடிசூடா மன்னராக ஆக்கியுள்ளீர்கள். அவரே அரசாங்க அதிபரையும் பிரதேச செயலாளர்களையும் ஏனைய இலாகா தலைவர்களையும் யாழ்ப்பாணத்தில் நியமிக்கின்றார். அவரது சொற்படி நடக்காதவர்கள் புலி ஆதரவாளர்கள் என குறி சுடப்படுகின்றனர். விடுதலைப் புலிகளுடன் எதுவித தொடர்பும் இல்லையென ஒரு அரசாங்க ஊழியரையும் கூற முடியாது. யாழ்ப்பாணம், வன்னி ஆகிய பகுதிகள் 1990 ஆண்டிலிருந்து 1995 ம் ஆண்டுவரை விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. மிகத் திறமையான ஒரு பிரதேச செயலாளருக்கு பதவி நீடிப்பு மறுக்கப்பட்டுள்ளது. அந்த செயலாளர் மிகவும் சிறந்தவர் என பொது மக்கள் அபிப்பராயப் படுகின்றனர். நியமனங்கள், இடமாற்றங்கள் அத்தனையும் அவர் சொற்படியே நடக்கின்றது. திறமைக்கு அங்கே இடமில்லை. இரு வருடங்களுக்கு முன்பு ஆசியர் நியமனங்கள் ஸ்ரீதர் படமாளிகையில் இயங்கும் அவரது காரியாலயத்தில் வழங்கப்பட்டது. சுருங்கக் கூறின் எல்லா இலாகாக்களுக்கும் மந்திரியாக அவர் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் யாழ் ஒலி என்ற பிரிவு அவரை மேம்படுத்தியே பிரச்சாரங்கள் செய்தது. ஈ.பி.டி.பி இனருக்கென அரசாங்கம் ஒரு தனி அரசு அமைக்கின்றதா என மக்கள் கேட்கின்றார்கள்.

அக்கடிதத்தில் மேலும் கூறப்படுவதாவது ஜ“பாராளுமன்றத்துக்கு செல்லுகின்ற தார்மீக உரிமையற்ற ஒரு குழுவினர் சரியோ பிழையோ பாராளுமன்றம் புகுந்து விட்டனர். அத்துடன் அவர்கள் திருப்தி அடைந்திருக்க வேண்டும். அதற்கு மாறாக அக் குழுவினரின் தலைவரை அமைச்சர் பதவி வழங்கி தேர்தல் நடப்பதற்கு முன்பு பல்வேறு வேலைத் திட்டங்களுக்கென வரவு செலவுத் திட்டத்தில் ஒதுப்படாத பெரும் தொகையான பணத்தை எதுவித கணக்கு வழக்கின்றி யாழ்ப்பாணத்தில் செலவிட வைத்தீர்கள். கண்டபடி கேட்டதற்கெல்லாம் கொடுக்கப்பட்ட பெருந் தொகையான பணத்தில் ஒரு பகுதி தனியாரிடம் போய் சேர்ந்தது. இவ்வாறு செலவிடப்பட்ட பெருந் தொகையான பணம் வீடு வாசலை இழந்து, இடம் பெயர்ந்த மக்களுடைய புனர்வாழ்வுக்காக நல்ல உள்ளம் படைத்த பிற நாட்டவர்களால் தாராளமாக வழங்கப்பட்டதே அன்றி மனித உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்காத, ஜனநாயகத்துக்கு விரோதமாக செயற்படும் சமூக விரோத குழு ஒன்றுக்கு அதன் அரசியல் கட்சியை வளர்ப்பதற்கும், தேர்தல் பிரச்சாரத்திற்கு செலவிடுவதற்கும் அல்ல.

இத்தகைய குற்றங்களுக்கு பொறுப்பான அதே பேர்வழியை நீங்கள் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சராக்கியது மட்டுமல்லாமல் வட கிழக்கிற்கு இந்து சமய கலாச்சார அமைச்சுக்களையும் கையளித்துள்ளீர்கள். அபிவிருத்திக்கு பொறுப்பான ரான் (TTRN) அமைப்பும் அவரின் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது. பிற நாடுகளால் பெருந்தொகையாக அபிவிருத்திக்காக ரான் அமைப்புக்கு கொடுக்கப்பட்ட பணத்தை ரானில் கடமையாற்றும் சகல உத்தியோகத்தர்களையும் தானே நியமித்து செலவழித்துள்ளார். நன்கொடை வழங்கும் நாடுகளில் பணம் மரத்தில் பிடுங்குவதில்லை. பல்வேறு நாடுகளில் வாழும் மக்களின் தியாக உணர்வால் சேர்க்கப்பட்ட பணமே உதவி பணமாக வருகின்றது. நாம் செலவிடும் ஒவ்வொரு சதத்தையும் நியாயப்படி செலவு செய்ய வேண்டுமேயொழிய பொது நலன் கருதாது தன்னலம் கருதும் ஒரு குழுவினரிடம் ஒப்படைக்க முடியாது.

அண்மையில் ஒரு பத்திரிகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் 400 குடும்பங்களின் புனர்வாழ்வுக்காக 22 மில்லியன் ரூபா ஒதுக்கியிருப்பதாக கூறப்பட்டது. இதுவொரு நற்செய்தியாக இருந்தாலும் இப் பணத்தைப் பெற்றவர்கள் யார்? எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. கிடைத்த அறிக்கையின்படி நல்லூர், யாழ்ப்பாணம், வலி வடக்கு தெல்லிப்பளை, வலி மேற்கு சுன்னாகம், தீவுப்பகுதி வேலணை கிழக்கு, வலி தெற்கு உடுவில், பருத்தித்துறை ஆகிய பிரதேச சபைகளில் முறையே 110, 95, 69, 11, 04, 80, 33 ஆகிய எண்ணிக்கையானோர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் யாரால் என்ன அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார்கள்? இப் பிரதேசங்களில் இவர்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டார்களா?

இன்னுமொரு அறிக்கையின்படி இடம்பெயர்ந்தோரை குடிமயர்த்த காணி வாங்கவும், கட்டிட பொருட்கள் வழங்கவும் ஒரு திட்டத்தை தயாரிக்கும்படி கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் அரசாங்க அதிபருக்கு கட்டளை பிறப்பித்திருந்தார். பார்வைக்கு அது நல்ல திட்டமாக இருந்தாலும் இத்திட்டம் மக்களின் பூர்வீக காணிகளை பறித்தெடுக்கின்ற ஒரு சூழ்ச்சியான திட்டமென அறிந்து அதிர்ச்சியடைந்தோம். இப்பொழுது உண்மை வெளியாகிவிட்டது. உயர் பாதுகாப்பு வலயத்தில் வாழ்ந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் இருந்து அகற்றி வேறு இடங்களில் குடியேற்றும் திட்டம் அம்பலமாகியது.

ஜனாதிபதி அவர்களே ஹொரகல காணி தங்களுக்கு எவ்வாறு முக்கியமோ அதே போல்தான் மக்களின் பூர்வீக காணிகள் அவர்களுக்கு முக்கியமாகும். ஆகவே இத் திட்டத்தை நான் வன்மையாக எதிர்க்கிறேன். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் நண்பர்கள் வீடுகளிலும், உறவினர்கள் வீடுகளிலும் பல ஆண்டுகாலமாக பல கஷ்டங்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பது என்றைக்கோ ஒரு நாள் தம்முடைய சொந்த நிலத்துக்கு போவோம் என்ற நம்பிக்கையே அன்றி வேறு இடத்தில் குடியேறுவதற்காக அல்ல. இதுதான் அரசின் நோக்கம் எனில் மக்கள் இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருக்கத் தேவையில்லை. அரசும் யுத்தத்தை தொடருவதாக இருந்தாலும் அல்லது தமிழ் மக்களை அடக்கி வைத்திருக்கின்ற எண்ணமும் இருந்தாலே அன்றி உயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே மக்களை குடியேற்ற வேண்டிய அவசியம் இல்லை. விரைவாக யுத்தத்தை முடித்து அமைதியை ஏற்படுத்தி மக்கள் விரைவில் தங்கள் இடத்தில் குடியேறவும் வழி செய்வீர்கள் என நம்புகிறேன். பண மோசடி, தம் ஆதரவாளருக்கு விசேட சலுகை, எதிரிகளை கண்டித்தல் போன்றவையே ஈ.பி.டி.பி இனரால் கையாளப்படுகின்றன. ஆகவே நான் மிகவும் வன்மையாக வற்புறுத்தி கேட்பது பிற நாடுகள் நன்கொடையாக வழங்கும் பணத்தில் ஒரு சதமேனும் அமைச்சரால் தன் இஷ்டப்படியோ அன்றி தன்னால் தெரிவு செய்யப்பட்டவர் மூலமோ இஷ்டப்படி செலவழிப்பதை அனுமதிக்கக் கூடாது. மேலும் பிற நாடுகளில் இருந்து வரும் பணம் சம்பந்தப்பட்ட நாடுகளின் ஆலோசனையோடு தெரிவு செய்யப்படும் திட்டங்களுக்கே செலவிடப்பட வேண்டும். ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்களை கொண்ட ஓர் ஆலோசனை குழுவை அமைக்கலாம் என ஆலோசனை கூற விரும்புகிறேன். என்னால் குறிப்பிடப்பட்ட இந்த விடயங்களை கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு ஊர்காவற்துறை தொகுதியில் வாழும் மக்களை குறிப்பாக நெடுந்தீவு மக்களை அவர்கள் படும் இன்னல்களில் இருந்து விடுவிக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்”.

ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா அவர்களுக்கு 14-05-2001 இல் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்குழு சம்பந்தமாக எழுதப்பட்ட கடிதம் இச் சந்தர்ப்பத்தில் பொருத்தமாக இருப்பதால் அதன் சில பகுதிகளை கீழே குறிப்பிடுகிறேன். பிரதி இணைக்கபட்டுள்ளது.

ஜ“மோசடி மூலம் பாராளுமன்ற ஆசனங்களில் நான்கை பெற்ற ஈ.பி.டி.பி யின் தலைவரை யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக நியமித்தமை எமக்கு விசனத்தைத் தருகிறது. ஏனைய ஐந்து உறுப்பினர்களும் 54930 வாக்குகள் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணத்தில் தெரிவாகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவரை தெரிவு செய்கின்ற உரிமை உறுப்பினர்களிடம் விடப்பட்டிருக்க வேண்டும். ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் பிழையான வழியில் தாங்கள் தலைவரை தெரிவு செய்தது, தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராகிய எம்மை குறிப்பாக என்னை அவமதிப்பது போலாகும். கடந்த பாராளுமன்றத்திலும் நீங்கள் அவரையே தலைவராக தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். அக் கட்சியைச் சேர்ந்த 13 வேட்பாளர்களும் 10 தொகுதிகளில் எடுத்த வாக்குகள் 175 ஆக இருந்தும் அவர்களில் 9 பேர் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். ஊர்காவற்துறை தொகுதியில் அவர்களுக்குக் கிடைத்த 8000 வாக்குகள் கணக்கில் எடுத்திருக்க முடியாதவையாகும். ஏனெனில் அன்று தொட்டு இன்று வரை ஊர்காவற்துறை தொகுதி மக்கள் ஈ.பி.டி.பி இனரின் இரும்புப் பிடியில் அடிமைகளாக வாழ்கின்றார்கள். 1994ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஈ.பி.டி.பி இனர் ஒரு மாற்றுக் கட்சி வேட்பாளரரையும் ஊர்காவற்துறை தொகுதிக்குள் போக அனுமதிக்கவில்லை. நான் மிக ஆர்வத்துடன் ஜனாதிபதியாகிய உங்களை கேட்பது உங்களுக்கோ அல்லது உங்கள் அரசில் வேறு யாருக்குமோ சுதந்திரம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் பற்றி பேசுவதற்கு தார்மீக உரிமை உண்டா எனக் கேட்க விரும்புகின்றேன். வறுமைப்பட்ட எமது நாடு யுத்தத்தினால் மிக வறுமைபட்டுள்ளது. கடந்த வருடம் வேறு எந்த மாவட்டத்திலும் நடைபெறாத வகையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின் அவரை மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு தலைவராக தெரிவு செய்திருக்கிறீர்கள். இலங்கை சரித்திரத்தில் இது முன்பு நடைபெறாத ஒன்றாகும். யாழ்ப்பாணத்தில் அவர் நடத்திய இரண்டு மணிநேர ஒரேயொரு கூட்டத்திற்கு திருகோணமலையிலிருந்து வடகிழக்கு மாகாண சபையின் பிரதான அதிகாரிகள் ஆளுநர் ஆகியோர் கலந்து கொண்டதால் இந்த அரசுக்கு ஏற்பட்ட செலவை எவ்வளவு என கணக்கிட முடியுமா? இக் கூட்டத்தை கூட்ட வேண்டிய மறைமுக நோக்கம் என்னவெனில் ஊழியர்கள் அனைவரும் அவர்களுக்கு தலை வணங்க வேண்டும் என்பதாலேயே. அவர்களுடைய எண்ணம் பிரயோசனம் அளித்தது. அவருக்காக அரச ஊழியர்கள் தேர்தலுக்கு முதல்நாள் இரவே தமது கடமைகளை செய்யத் துவங்கி விட்டார்கள். திக்கம் வடிச்சாலை அவர்கள் பொறுப்பேற்றிருந்தால் அவர்களின் முயற்சி மிகக் கூடுதலான பலனை தந்திருக்கும்.

யாழ்ப்பாணத்தில் ஏழை வரியிறுப்பாளரின் பணத்தாலும் வடகிழக்கின் தமிழ் பகுதிகளில் தமிழ் அலுவல்கள் அமைச்சர் என்ற பெயரிலும் நீங்கள் மேம்படுத்திவரும் அக் குழுவினர் தங்களின் உதவியுடன் கிடைத்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியுடன் திருப்தி அடைந்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அவர்களுக்கு பல பதவிகளை கொடுத்து செலவை கூட்டி வடக்கிலும் கிழக்கிலும் எல்லா விடயங்களிலும் தலையிட வாய்ப்பளித்தீர்கள். தற்போது அமைச்சர் தனது ஸ்ரீதர் படமாளிகை அலுவலகத்துக்கு முன்பாக உள்ள தனது அமைச்சில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தை கூட்டுகிறார். பெருமளவில் அவரின் ஆயுதம் தாங்கிய போராளிகள் சூழ்ந்து நிற்கின்றனர். அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்களா? நான் 02-09-2001 ஆண்டு உங்களுக்கு அனுப்பிய ஆட்சேபனை கடிதத்தை இத்துடன் அனுப்பியுள்ளேன்.

முறைப்படி பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் எதிர்கால சந்ததியின் நன்மை கருதி ஜனநாயகத்தை பாதுகாக்க என் உயிரை கொடுக்கவும் தயாராக உள்ளேன். அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லையெனத் தீர்மானித்துள்ளேன்.

ஈற்றில் ஊர்காவற்துறை தொகுதி மக்களை ஈ.பி.டி.பி யினரின் பிடியிலிருந்து விடுவிக்குமாறு வேண்டுகிறேன். அத்துடன் 12000 சீவல் தொழிலாளர்களுக்கு சொந்தமான திக்கம் வடிசாலையை துப்பாக்கி முனையில் எடுத்தனர். அதையும் திரும்ப கொடுக்கவும். அத்துடன் யாழ் மாநகரசபை நிர்வாகத்தில் கை வைக்க வேண்டாமென பணிக்கவும்”.ஸ

ஜனாதிபதி அவர்களே மிக இக்கட்டான ஓர் காலத்தில் நாட்டின் தலைமை பதவியை வகிக்கின்றீர்கள் என்பதால் ஒவ்வொரு செயற்பாடும் மிகக் கவனத்துடன் நடைபெற வேண்டும். மனித உரிமை மீறல் விடயத்தில் கூட நீங்கள் ஏன் பழியை சுமக்க வேண்டும?. எனது கடிதத்தின் 1ம், 2ம் பாகங்களில் கொடுக்கப்பட்டுள்ள சில பகுதிகள் உண்மையை விளக்குகின்றன. கௌரவ டக்ளஸ் தேவானந்தா போதியளவு அதிகாரத்தையும் பல்வேறு சலுகைகளையும் அவருக்குரியவற்றுக்கு மேலதிகமாக அனுபவித்து விட்டார். தாங்கள் எவ்வாறு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போகிறீர்கள் என சர்வதேச சமூகம் அவதானித்துக் கொண்டிருக்கும் போது மற்றவர்களுடைய தவறால் அரசு தனது நாணயத்தை இழக்கக் கூடாது என்பது என் ஆதங்கமாகும். எனது மக்களுக்கும் பொதுவாக என் நாட்டுக்கும் என் கடமையை செய்து விட்டேன் என்ற திருப்தியுடன் நான் போகிறேன். தங்கள் முயற்சிகள் அத்தனையும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.


இப்படிக்கு
அன்புள்ள


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ