உங்கள் கொலைகளை நிறுத்துங்கள்

19-06-2006
திரு. சு.ப தமிழ்ச்செல்வன்
அரசியல் துறை பொறுப்பாளர்
தமிழீழ விடுதலைப் புலிகள்
கிளிநொச்சி.

அன்புள்ள தமிழ்ச்செல்வனுக்கு

உங்கள் கொலைகளை நிறுத்துங்கள்

சமாதானப் பேச்சுவார்த்தைக்கென நீர் ஒஸ்லோ சென்று நாடு திரும்பிய 24 மணி நேரத்துக்குள் கெப்பிட்டிக்கொலாவ என்னும் கிராமத்தில் கடந்த 15ம் திகதி கிளேமோர் கண்ணிவெடி மூலம், உமது போராளிகள் 65 அப்பாவி சிங்கள மக்களின் உயிரைக் குடித்ததுமல்லாமல் 70இற்கு மேற்பட்டோரை படுகாயமடையவும் செய்த இச் சம்பவத்தை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன். இவ் அவமானமான செயலுக்கு நீரே பொறுப்பேற்க வேண்டும். நீர் அதை மறுத்தாலும் எவரும் அதை ஏற்கப் போவதில்லை. சர்வதேச சமூகத்தினரால் மிகவும் உயர்ந்தவர்களாக கணிக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு இத்தகைய ஈனச் செயல்கள் அவமானத்தையே தேடித்தரும்.

உமது போராளிகள் உமது கட்டளைக்கமைய அல்லது நீர் அறிந்திருக்கத்தக்கதாக 700 போர் வீரர்களையும் ஏனைய சிப்பந்திகளையும் ஏற்றிச் சென்ற கடற்படை கப்பலை மூழ்கடிக்க முயற்சித்தமை மிக வருந்தக்கூடிய செயலே. அதே போன்று குழந்தைகள், பெண்கள் உட்பட 13 அப்பாவி பொது மக்களை கொலை செய்த சம்பவமும் வங்காலையில் இரு குழந்தைகள் உட்பட ஓர் குடும்பத்தையே கூண்டோடு அழித்தமையும் மிக்க வருந்தத்தக்கு செயலேயாகும். இவற்றையெல்லாம் யார் செய்கின்றார்கள் என்பதல்ல பிரச்சினை, இவை ஏன் நடக்கின்றன என்பதுதான் எனது கேள்வி. உங்களுடைய குற்றங்களை பிறர் மீது போடாதீர்கள். ஒவ்வொரு பொதுமகனையும் பாதுகாக்க வேண்டிய புனிதமான கடமை உங்களுடையதே. நீங்கள் அப்பாவி பொது மக்களின் மீது சிறிதேனும் மதிப்பு வைத்திருப்பீர்களேயானால் உங்களுடைய செயலால் ஒரு உயிரைத்தன்னும் இழக்க வேண்டிய நிலை ஏற்படாது. ஆனால் நீங்களோ சில போர் வீரர்களின் உயிரை எடுக்கின்ற அதேவேளை சில அப்பாவி மக்களின் உயிர்களையும் சேர்த்து எடுப்பதோடு அத்தகைய பொது மக்களின் மரணத்திற்கு வருத்தம் தெரிவிக்காது, அதே பிழையை மீண்டும் மீண்டும் செய்து வருகிறீர்கள். இராணுவத்தால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டால் கூரைமீது ஏறி நின்று கத்துகின்றீர்கள். தயவு செய்து ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் அத்தனையையும் பொருட்படுத்தாது விட இராணுவத்தினர் காந்தியவாதிகள் அல்ல. நீங்கள் இராணுவத்தினர் மீது மேற்கொள்ளும் தாக்குதல்களே இராணுவத்தினர் பதிலடி மேற்கொள்ள அவர்களை தூண்டுவதாக அமைகிறது. சகல கொலைகளையும் நான் வன்மையாக கண்டிப்பதோடு எச் சந்தர்ப்பத்திலும் எவரையேனும் கொலை செய்வதை நியாயப்படுத்த மாட்டேன். உங்களுடைய போராளிகளால் மேற்கொள்ளப்படும் கொலைகளை நிறுத்திவிட்டு பாருங்கள் அந்த நிமிடத்திலிருந்து சகல கொலைகளும் தானாகவே நிற்கும்.

நீங்கள் கொலை செய்ய எத்தனித்த இராணுவத்தினரே உமக்கும் உங்கள் தலைவர்களுக்கும் உங்கள் போராளிகளுக்கும் விமானநிலையம், கிழக்கு மாகாணம் போன்ற இடங்களுக்கு சென்று வர பாதுகாப்பு கொடுப்பவர்களாவர். இத்தகைய உங்கள் செயல்களுக்கும், சர்வதேச சமூகத்தால் ஏளனம் செய்யப்படும் நீங்கள் விடும் அறிக்கைகளுக்கும், உங்களுடைய தலைவரின் அங்கீகாரம் தரப்படுகின்றதா என்பதை அறிய ஆர்வமாக உள்ளேன். உங்கள் போராளிகள் திரு. வே. பிரபாகரன் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை என்ற எனது கூற்றையும் அவர்கள் தாமே சுதந்திரமாக முடிவுகள் எடுக்கின்றார்கள் என்ற எனது கூற்றையும் நீங்கள் உறுதிப்படுத்த முயற்சிக்கின்றீர்களா? உமது கூற்றுக்களில் அநேகமானவை உம்மிடம் இறுமாப்பு இருப்பதையும், பிறரை மதியாத தன்மையையும் எடுத்துக் காட்டுவதோடு நீங்கள் பேச்சுவார்த்தைக்கு வர தயாரில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. நீங்கள் யுத்தத்துக்கு தயார் என அடிக்கடி அறைகூவல்விடுவது, ஓநாய், ஓநாய் என அடிக்கடி கூச்சலிட்டு மக்களை ஏமாற்றி இறுதியில் தன் மந்தைக்கூட்டத்தையே இழந்த இடையச் சிறுவனின் கதைதான் எனக்கு ஞாபகம் வருகிறது. உங்களுடைய உள்ளுர் தலைவர்கள் சிலரும் உங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சில பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த ராகத்தையே பாடுகின்றனர். அவர்கள் மௌனமாக இருப்பார்களேயானால் அவர்களுக்கும் நம் எல்லோருக்கும் நல்லது. உங்களுடைய இயக்கத்தை போன்ற ஒன்று முழு உலகையும் ஆத்திரமூட்டிவிட்டு ஒரு யுத்தத்தை வெல்லலாம் என கனவு காணாதீர்கள். ஏனையவர்களை போன்று தமிழ் மக்களும் யுத்தத்தை விரும்பவில்லை. அவர்கள் உங்களுடைய மக்கள் அல்ல. தயவு செய்து அவர்களை “எம் மக்கள்” என்று கூறுவதை நிறுத்துங்கள்.

உங்களுடைய திட்டத்தை நாடு நன்கறியும். சர்வதேச சமூகமும் அவ்வாறே. ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்த சிங்கள மக்களை தூண்டக்கூடிய செயல்களில் உங்களுடைய போராளிகளை செயற்பட வைத்துள்ளீர்கள். இம் முயற்சியில் நீங்கள் இதுவரை வெற்றியடையவில்லை. திருகோணமலையில் ஆரம்பித்து பிற இடங்களுக்கு பரவும் என கருதி இனக்கலவரத்தை தூண்ட நீங்கள் எடுத்த முயற்சி உங்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கும். நடந்தவை அத்தனையும் திருகோணமலை மாவட்டத்துக்குள்ளேயே அடங்கிவிட்டது. புதுவருடத்திற்கு முதல்நாள் “வருஷ சந்தைக்கு” சிங்கள, ஆண் பெண் பிள்ளைகள் அச் சந்தையில் பொருட்களை வாங்க கூடுவார்கள் எனத் தெரிந்திருந்தும் பொது அறிவு சொற்பமேனும் அற்ற ஒருவர் குண்டை வெடிக்க வைப்பாரா?. அக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் மிகக் கேவலமானவை. இது உங்களுடைய போராளிகளால் சிங்கள மக்களை தூண்டிவிடுவதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகும். இச் செயலை அவர்கள் தாமாக செய்தார்களோ அல்லது உமது கட்டளைக்கு அமைய செய்தார்களோ நான் அறியேன். ஆனால் இச் சம்பவத்தில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் பலர் உயிரிழந்ததோடு இந்த முட்டாள் செயலால் எரிக்கப்பட்டும், சூறையாடப்பட்டதுமான தமிழர்களின் சொத்து பலகோடி பெறுமதியானதாகும். தம் சொந்த வீட்டை விட்டு தெற்கே சிங்கள, இஸ்லாமிய மக்களோடு மிக அமைதியாக வாழும் பல இலட்சம் தமிழ் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கோடு செய்யப்பட்ட பொறுப்பற்ற இச் செயலுக்கு நீரே பொறுப்பேற்க வேண்டும். அதிஷ்டவசமாக உங்களுடைய துர் நோக்கத்தை மக்கள் அறிந்தமையால் திருகோணமலை தவிர்த்து ஏனைய பகுதிகளில் அமைதி நிலவியது. உங்களால் 65 பேர் கொல்லப்பட்ட சம்பவமும் சிங்கள மக்களை தூண்டிவிட்டு ஓர் இனக்கலவரத்தை ஏற்படுத்த எடுத்த முயற்சியாகும். மீண்டும் சிங்கள் மக்கள் உங்கள் சதியை வெற்றிகரமாக முறியடித்து விட்டார்கள். நான் வன்முறையை வன்மையாக கண்டிப்பவன் என்பதையும் எக் கொலை யாரால் செய்யப்பட்டாலும் அதை மூடி மறைப்பவனும் அல்ல என்பதையும் தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள். எச் சந்தர்பத்திலும் இன்னொருவரின் உயிரை எடுக்கின்ற உரிமை யாருக்கும் கிடையாது. சில குற்ற நடவடிக்கைகளுக்கு சில முன்னணி அமைப்புக்கள் தான் காரணம் என்று நீங்கள் கூறுவது பெரிய பகிடியாகும். இத்தகைய முன்னணி அமைப்புக்கள் அத்தனையும் உங்கள் போராளிகளால் நடாத்தப்படும் போலியான அமைப்புக்கள் என்பதை தயவு செய்து ஒத்துக்கொள்ளுங்கள். பொதுமக்கள்தான் கிளேமோர்களை வெடிக்க வைக்கின்றார்கள் என்ற தங்களுடைய கூற்றை சர்வதேச சமூகம் கிண்டல்செய்தமையை ஞாபகமூட்ட விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்கள் அநேகமாக இராணுவத்தை அல்லது கடற்படையை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல அப்பாவி மக்களுமே. இராணுவத்தினரின் பதிலடியால் அப்பாவிகளின் உயிரிழப்பிற்கும் நீரே பொறுப்பேற்க வேண்டும். தற்பாதுகாப்புக்கென பல்கலைகழக மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதாக கூறுகின்றீர்கள். யாரிடமிருந்து பாதுகாக்க? நீங்கள் அவர்களை உங்களுடைய போராளிகளுடன் கலக்க வைத்து அப் போராளிகள் சில குற்றங்களை புரிந்துவிட்டு தப்பி செல்கின்ற வேளையில் அப்பாவி மாணவர்களே கொலை செய்யப்படுகின்றார்கள். முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு கட்டாய பயிற்சி அளித்தீர்கள். அவர்களை உங்களுடைய போராளிகளுடன் கலக்க வைத்து போராளிகள் குற்றங்களை செய்து விட்டு தப்பிக்கும் வேளையில் அப்பாவி பொது மக்களே இராணுவத்தினரிடம் மாட்டிக் கொள்கின்றனர். கைக்குண்டு வீசி ஒரு இராணுவ வீரரை கொன்று சிலரை காயப்படுத்திய சம்பவம் ஒன்று மாணவர் ஒன்றியத்தினரால் மேற்கொள்ளப்பட்டது என கூறப்பட்டதை நான் நம்பமாட்டேன். மாணவர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபடுவதில்லை. ஆனால் நீங்கள் அவ்வாறு கூறின் அத்தகைய மாணவர்களுடைய இறப்பிற்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டும்.

பல சந்தர்ப்பங்களில் சர்வதேச சமூகத்தை நீங்கள் ஏமாற்ற முடியாது எனக் கூறிவந்துள்ளேன். உங்களுடைய நடவடிக்கைகள் அத்தனையையும் அறிந்தவர்களாதலால் உங்களால் அவிழ்த்து விடப்படும் புளுகு மூட்டைகளை அவர்கள் நம்பத் தயாரில்லை. தினமும் தவறாது கைக்குண்டு வீச்சு மூலமோ, அல்லது கிளேமோர் கண்ணிவெடி மூலமோ, அல்லது உங்களுடைய பிஸ்டல் குழு மூலமோ நீங்கள் இராணுவத்தினரை கொன்று வருகின்றீர்கள். உங்களுடைய செயல்களால் சில அப்பாவி மக்களும் கொல்லப்படுகின்றார்கள். இருப்பினும் உங்கள் ஈடுபாட்டை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து இராணுவத்தை குற்றம் கூறி வருகின்றீர்கள். நீங்கள் கொலைகளை முதலில் நிறுத்துங்கள். ஏனைய கொலைகள் நாடு பூராகவும் தானாகவே நிற்கும். தொடர்ந்து பணி புறக்கணிப்பை நடத்த வேண்டுமென்று கூறிய மூளைசாலி யார்? உங்களுடைய கொலைகளுக்கும் விடுதலை கொடுத்திருக்கலாமே. இச் செயலால் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதையும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோன்றும் மாணவர்கள் எவ்வளவு அசௌகரியப்பட்டார்கள் என்பதையும் நீங்கள் அறியமாட்டீர்கள்.

உங்களுடைய இலக்கை அடைய நீங்கள் தவறிவிட்ட காரணத்தால் உங்களுடைய பிரபலமான நடவடிக்கைகள் எல்லாவற்றையும் நிறுத்தி தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள். நீங்கள் தமிழ் மக்களை, இளைஞர்களையும், குறிப்பாக மாணவர்களையும், அரசையும், நோர்வே அனுசரணையாளர்கள் உட்பட சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றி விட்டீர்கள்.

நீங்கள் எமது இல்லங்களை, எமது சுகாதாரத்தை, எமது இளைஞர்களை, எமது பிள்ளைகளின் படிப்பை, எமது கலாச்சாரத்தை, அத்தோடு நாம் பேணி காத்த நாகரீகத்தையும் அழித்துவிட்டீர்கள். உங்களால் நாம் எல்லோரும் ஓட்டாண்டி ஆக்கப்பட்டோம். எமது ஜனநாயக, அடிப்படை உரிமைகளை பறித்தெடுத்து விட்டீர்கள். அத்தோடு எமது மனித உரிமைகள் பலவற்றை மீறிவிட்டீர்கள். இப்போது சர்வாதிகார ஆட்சியை நிறுவ முயற்சிக்கின்றீர்கள். தயவு செய்து மூட்டை முடிச்சுக்களுடனும், உங்கள் குடும்பத்தினருடனும் பிற நாடுகளில் திறமையான கல்வி வசதி பெற்று வாழும் உங்கள் பிள்ளைகளுடன் போய் சேருங்கள். தமிழ் மக்களை அவர்கள் இஷ்டப்படி விட்டுவிட்டால் தம் வேலைகளை தாங்களே பார்த்துக் கொள்;வார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படின் சர்வதேச சமூகம் அக்கடமையைச் செய்யும். ஆனால் அவர்களுக்கு இன்று தேவைப்படுவது எல்லாம் உங்கள் போராளிகளிடமிருந்து பாதுகாப்பே. ஆகையினால்தான் சிங்கள, முஸ்லீம் மக்களுடன் சேர்ந்து வாழுவதற்காக தெற்கே இடம் பெயர்ந்து சென்றுள்ளனர். தமிழ் நாட்டுக்கு தப்பிச் செல்லும் மக்கள் உங்;கள் கட்டுப்பாட்டின் கீழ் உங்களுடைய அடக்குமுறையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே.

இறுதியாக எங்களுடைய இளைஞர்களை இனியேனும் விட்டு வையுங்கள். தினமும் நீங்கள் சிங்கள போர்வீரர்களின் உயிர்களையும், பொது மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்க்கின்ற பொலிஸ்காரர்களையும் மட்டும் கொல்லவில்லை அப்பாவி தமிழ், சிங்கள, முஸ்லீம்களையும் கொல்கின்றீர்கள். எமது இளைஞர்களை பல்வேறு ஆபத்தான செயல்களில் ஈடுபடுமாறு பல்வேறு இடங்களுக்கு அனுப்பி அவர்களை பலி கொடுக்கின்றீர்கள். இத்தகைய பணிகளுக்கு உங்களுடைய பிள்ளைகளை அனுப்புங்கள் என்று நான் கூறவரவில்லை. ஏனெனில் உங்களுக்கு அவர்கள் அருமையானவர்கள். நான் உங்களிடம் வேண்டுவது ஒன்றை மட்டுமே. அப்பாவி ஏழைப் பெற்றோரின் பிள்ளைகளை மேலும் பலி கொடுக்காது உங்களுடைய பிள்ளைகளை போன்று கல்வி கற்க விடுங்கள்.

நன்றி

இப்படிக்கு


வீ.ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ