ஒரு மனிதாபிமான வேண்டுகோள்

18-02-2008
திரு. வே.பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்
கிளிநொச்சி


அன்புள்ள தம்பி,

ஒரு மனிதாபிமான வேண்டுகோள்

நல்லெண்ணத்துடன் உங்களுக்கு பல கடிதங்கள் அனுப்பியிருந்தும் அவற்றுக்கு உங்களிடமிருந்தோ அன்றி உங்கள் சார்பில் வேறு எவரிடமிருந்தோ பதில் எதுவும் கிடைக்கவில்லை. உங்களது கொடூரமான நடவடிக்கைகளால் நீங்கள் ஏகபிரதிநிதிப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் தமிழ் மக்களுக்கும், அரசியலில் அக்கறை கொள்ளாது தம் அலுவல்களை மட்டும் கவனித்துக் கொண்டு உங்களுடன் எந்த விதத்திலும் முரண்பாடில்லாதிருக்கும் அப்பாவி சிங்கள கிராமவாசிகளுக்கும், எனது ஆலோசனைகளையும், எச்சரிக்கைகளையும் மீறி நீங்களும் உங்கள் போராளிகளும் கொடூரமான செயல்களால் பெரும் துன்பத்தையும், நஷ்டத்தையும் தூரதிஷ்டவசமாக தொடர்ந்தும் ஏற்படுத்தி வருகின்றீர்கள். உங்களது கடந்த மாவீரர் தின உரை தமிழ் மக்களின் சிறந்த எதிர்காலத்துக்கு எந்தவித நம்பிக்கையையும் ஊட்டவில்லை. இருண்ட எதிர்காலத்தையே எதிர்வு கூறுகிறது. எமது நாட்டு மக்கள் வெளியேறும் வேகத்தைப் பார்க்கும் போது இலங்கையில் தமிழ் மக்களின் எண்ணிக்கை அவர்களுக்காக குரல் கொடுக்க ஆளின்றி மிகவும் பெருமளவில் குறைந்துவிடும் என்று எண்ணத் தோன்றுகிறது. வயது முதிர்ந்த தமிழ் பிரஜை என்ற வகையில் உங்களுக்கு கசப்பாக தோன்றினாலும் கூட உங்களது இன்றைய நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தும் மாவீரர் தின உரையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்ட வேண்டிய தார்மீக கடமை எனக்குண்டு. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பல உண்மைக்கு புறம்பானதாகவும், திரிபுபடுத்தப்பட்டவையாகவும், மிகைப்படுத்தப்பட்டவையாகவும் தோன்றுகின்றன. உங்களை சரியான பாதைக்கு கொண்டுவரும் நோக்கத்துடனேயே இக் கடிதம் எழுதப்படுகின்றது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இக் கடைசி நேரத்திலும் கூட அடைய முடியாத தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடுமாறு மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றேன். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அநாகரிகமான முறையில் மக்கள் வெட்டிக் கொல்லப்படுவதையும், சிறுவர்கள் உட்பட அப்பாவி மக்கள் கூடுதலாக பலியாகும் இராணுவத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் கிளேமோர் குண்டுத்தாக்குதல்களையும் தயவு செய்து நிறுத்திக் கொள்ளவும்.

ஒரு காலத்தில் உங்களை கணக்கிலெடுத்து உங்களுக்கும்; உங்கள் போராளிகளுக்கும் பல வசதிகளை சர்வதேச சமூகம் வழங்கியிருந்தது. இப்பொழுது உங்கள் நடவடிக்கைகள் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டு சர்வதேச சமூகத்தின் முன் செல்லாக்காசாக ஆக்கப்பட்டுள்ளீர்கள். அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெறும் ஆட்கடத்தல்கள், மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசுகின்றீர்கள். அத்தகைய சம்பவங்கள் கூடுதலாக உங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் இடம்பெறுவதை முழு உலகமுமே அறியும். இதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன். ஒருவர் மற்றொருவரை கொல்வதற்கோ, சித்திரவதை செய்வதற்கோ எந்த உரிமையும் கிடையாது. இராணுவமோ, நீங்கள் கூறுவது போல் ஒட்டுப்படையோ அல்லது நீங்களோ மேற்கொள்ளும் ஒவ்வொரு கொலைகளையும் நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.


பௌத்தமும் நீங்களும்

பௌத்தத்தைப் பற்றி பேசும் அருகதை உங்களுக்கில்லை. பௌத்த சித்தாந்தம் பேராசையற்ற, அன்பு, இரக்கம், நீதி, கருணை போன்ற தத்துவங்களை போதிப்பதாகும். ஒரு சிலரை தவிர இந்த நாட்டில் வாழும் பௌத்தர்கள் 2000 ஆண்டுகளுக்கு மேல் இக் கோட்பாடுகளுக்கமைய வாழ்வதாக கூறுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். உங்களைப்போல் சிலர் சிங்கள இனத்திலும், வேறு இனத்திலும் இருக்கின்றார்கள். இத்தகைய கறுப்பு ஆடுகள் தமது இனத்துக்கும், மதத்துக்கும் பெரும் அபகீர்த்தியை தேடுபவர்கள். அவர்களைப் பற்றி பொருட்படுத்தத் தேவையில்லை. சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் பல்லின மக்கள் ஆகிய நாம் அவரவர்களுடைய விருந்தோம்பலை தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வந்திருக்கிறோம்;. சிங்களவர்கள் இனத்துவேஷம் என்னும் விஷத்தில் மூழ்கி உள்ளனர் என்ற கூற்று உங்களது கற்பனையே. சுயநலம் கருதி உங்களைப் போன்ற சிலர் விஷத்தைக் கக்குவது உண்மையே. ஆனால் நீங்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி என கூறுவதைப்போல் அவர்கள் சிங்கள மக்களின் ஏகபிரதிநிதிகள் என கூறுவதில்லை. உங்களது போராளிகளே நீங்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது சந்தேகமே. தயது செய்து உங்களது துப்பாக்கிகளை ஒருபுறம் வைத்துவிட்டு மக்கள் சுதந்திரமாக நடமாடக்கூடியவாறு உங்களது இரும்புத்திரையை நீக்கிவிட்டு பார்த்தால் ஒருவர் தன்னும் மிஞ்சியிருப்பது சந்தேகமே. அப்போதுதான் நான் கூறியது எந்தளவுக்கு உண்மை என்பது புரியும். நீங்கள் எமது இளம் சந்ததியினருக்கு ஏற்றியுள்ள வகுப்புவாத விஷத்தை சமநிலைப்படுத்த பல ஆண்டுகள் செல்லும். அதிஷ்டவசமாக சிங்கள இளம் சந்ததியினர் வகுப்புவாத கறைபடியாது ஒரே பெற்றோர்களின் பிள்ளைகள் போல் வாழ்கிறார்கள்.

இலங்கையில் வகுப்புவாத அரசியல்

கற்பனைக்கு எட்டாதளவு வன்முறையை தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்கள் கட்டவிழ்த்துள்ளனர் என்ற உங்களது குற்றச்சாட்டு நகைப்புக்குரியதும், நம்பமுடியாததும் ஏற்கமுடியாததுமாகும். இத்தகைய அற்பத்தனமான குற்றச்சாட்டுக்களைக் கூறி ரத்தம் தோய்ந்த உங்கள் கைகளை சுத்தம் செய்ய முயற்சிக்கிறீர். இலங்கை வாழ் தமிழ் மக்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் உங்களுக்கு பயந்தும், தமது பிள்ளைகளை போராளிகளாக இணைத்துக் கொள்ளப்படுவதை தடுக்கவும், தம் பாரம்பரிய வாழ்விடங்களை விட்டு தென்னிலங்கையில் சிங்கள, முஸ்லீம் சமூகங்களோடு வாழ்கின்றார்கள் என்பது உலகறிந்த உண்மை. தமிழ் மக்களின் நீண்டகால போராட்டம் அகிம்சை முறையிலும் சரி, வன்முறையிலும் சரி இடம்பெற்ற காலத்தில் கூட நியாயமாக சிந்தித்த சிங்கள மக்கள் நியாயத்திற்கும், நீதிக்கும், சமத்துவத்துக்குமாக போராட உறுதி பூண்டிருந்ததே உண்மை அன்றி நீங்கள் கூறுவது போல் அல்ல.

தமிழ் மக்களின் கலாச்சாரம்

இலங்கைவாழ் தமிழர்கள் தமது கலாச்சாரத்தையும், நாகரீகத்தையும் இட்டு பெருமையுடன் வாழ்ந்தார்கள். மிருகத்தனமான கொலைகளும், சித்திரவதைகளும் அவர்களுக்கு அந்நியமானவை. மிருகத்தனத்தையும், சுட்டும், வெட்டியும் மக்களை கொலை செய்யும் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியவர்கள் நீங்களே. மிருகத்தனமும், பயங்கரவாதமும் தமிழ் மக்களுக்கு பரிச்சயப்படாதவை. கடந்த காலத்தில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் போது கொடூரமான சில கொலைகள் நடந்துள்ளன. அவை சில காடையர்களின் செயற்பாடாகும். சிங்கள பொது மக்கள் மிக அனுதாபத்துடன் தமிழ் மக்களை தமது காடையர்களிடமிருந்து காப்பாற்றியுள்ளனர். பல சந்தர்ப்பங்களில் உங்களுடைய மிருகத்தனம் பெண்களையும், குழந்தைகளையும் படுகொலை செய்யுமளவிற்கு மீறி செயற்பட்டுள்ளது. கர்ப்பிணிகளையும், சிசுக்களையும் கூட நீங்கள் விட்டு வைக்கவில்லை. இத்தகைய சம்பவங்கள் ஒன்றிலேனும் சிங்கள பொது மக்கள் பங்கு கொண்ட சம்பவத்தை உங்களால் கூற முடியுமா? அப்படியானால் எப்போ, எங்கே என்ற விபரத்தை நான் அறிய விரும்புகின்றேன். ஆனால் மிகவும் வெட்கக்கேடான விடயம் என்னவென்றால் நீங்களும், உங்களது போராளிகளும் பல வெட்கப்படக்கூடிய மிருகத்தனமான சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு குற்றத்தை இனந்தெரியாத வேறு சிலரில் சுமத்தியுள்ளீர்கள். எந்தெந்த சம்பவத்தில் நீங்களும், வேறு சிலரும் ஈடுபட்டுள்ளீர்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர். நான் யாருக்கும் வக்காலத்து வாங்கவில்லை. நான் வற்புறுத்தி கூறுவது யாதெனில் நீங்கள் கூறுவது போல் சிங்கள பொது மக்கள் எவரேனும் இத்தகைய தமிழ் மக்களின் மிருகத்தனமான கொலை நடவடிக்கைகளில் சம்பந்தப்படவில்லை என்பதே. விதிவிலக்காக கூறுவதானால் 1958 இற்கும் 1983 இற்கும் இடையில் நடைபெற்ற சில இனக்கலவரங்களை குறிப்பிடலாம். 1983ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரமும், திருகோணமலையில் இடம்பெற்ற இனக்கலவரமும் உங்களது செயற்பாட்டால் திட்டமிட்டு தூண்டப்பட்டவையே. தமிழ் அரச ஊழியர்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள், கலாநிதிகள் போன்ற பலர் பெருமளவில் உங்களால் கொல்லப்பட்டவர்களே அன்றி நீங்கள் கூறுவது போல் சிங்களவர்களால் அல்ல. இவ்விடயத்தில் உங்களுடைய கை சுத்தமானதென கூற முடியுமா? தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட இத்தகைய கொலைகள் அத்தனைக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டும்.

சாதாரண சிங்கள மகனின் சிந்தனை

நீங்கள் பல சொத்தழிவுகளை ஏற்படுத்தியும், கைக்குண்டு, கிளேமோர் குண்டுத்தாக்குதல்கள், தற்கொலை குண்டுத்தாக்குதல் போன்ற சம்பவங்கள் மூலம் கணக்கிலடங்கா அப்பாவி சிங்கள ஆண், பெண் பிள்ளைகளின் உயிர்களை பலி எடுத்திருந்தும் சிங்கள மக்கள் தம்மை மாற்றிக்கொள்ளவில்லை. இத்தகைய குண்டுத் தாக்குதல்கள் உங்கள் பணிப்பின் பேரில் உங்களது போராளிகளால் ஒரு இனக்கலவரத்தை தூண்டும் நோக்கோடு, சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் நடத்தப்படுகின்றன. 1983 ஜூலை கலவரத்தில் தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டது போல் மீண்டும் ஒரு இனக்கலவரத்தை தூண்ட நீங்கள் கடுமையாக முயற்சிக்கின்றீர்கள் என்பதை அனைவரும் அறிவர். அச்சம்பவம் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டதாகும். தென்னிலங்கையில் பரந்து வாழ்ந்த பல இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்களை காப்பாற்றிய பெருமை சாதாரண சிங்கள மகனுக்கே உரியதாகும். அன்று இனக்கலவரத்துக்கு காரணமாக இருந்த குண்டர்கள் கூட உங்களால் தினமும் இனக்கலவரத்தை தூண்டும் நோக்கத்தோடு பல சிங்கள மக்கள் மிருக்கத்தனமாக கொல்லப்பட்டும் இன்று தம்மை மாற்றிக் கொண்டு உங்களது பொறியில் சிக்காது தப்பிக் கொள்கின்றனர்.

மக்களும் சர்வதேச சமூகமும்.

உங்களது நிலைப்பாட்டில் மக்களோ, சர்வதேச சமூகமோ திருப்தியடையவில்லை. உங்கள் மதிப்பை நீங்கள் நாளுக்கு நாள் இழந்து வருகிறீர்கள். எமது சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் ஏனைய இன மக்களை கொல்வதையும் அவர்களுடைய சொத்துக்களை அழிப்பதையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. 30,000 இற்கு மேற்பட்ட விதவைகளையும் ஆயிரக்கணக்கான அநாதைகளையும் உருவாக்கியுள்ளீர்கள். ஆயிரக்கணக்கானோர் பார்வையிழந்து, அங்கவீனர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். 20,000 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களும், யுவதிகளும் அதேபோல் இருமடங்கு சிங்கள, முஸ்லீம் இளைஞர்களும் யுத்த முனையில் பலி கொடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த நாட்டில் உள்ள சில தலைவர்கள் இத்தகைய அப்பாவி இளைஞர்கள் மீதும் அவர்களின் பெற்றோர்கள் மீதும் கடுகளவேனும் அனுதாபம் இருக்குமேயாயின் யுத்த மூலம் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் எதுவும் இருக்காது. நீங்கள் தங்களை ஏமாற்றி விட்டீர்கள் என மக்கள் நினைக்கிறார்கள். அதேபோல் சிங்கள மக்களும் சில சிங்கள தலைவர்களை பற்றி அதே கருத்தைக் கொண்டுள்ளனர். சாதாரணமான மக்கள் சமாதானமாக சம உரிமையுடன் வாழ்வதையே விரும்புகின்றார்கள். எவரும் விசேட சலுகையை விரும்பவில்லை. நீங்கள் பிரிவினையை கைவிட்டு அரசுடன் பேச வேண்டுமென்று தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். அன்றேல் தம்மை தம் அலுவல்களை பார்க்க விடும்படி கேட்கிறார்கள்

மக்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மாவீரர்தின உரையில் உங்களுக்கு ஆதரவு தந்தவர்கள் அத்தனை பேரையும் நன்றிகெட்டதனமாக கண்டித்துள்ளீர்கள். அதனால் அவர்களுடைய ஆதரவை இழந்துள்ளதோடு அவர்களின் கோபத்திற்கும் உள்ளாகியுள்ளீர்கள். நீங்கள் ஓரங்கட்டப்பட்டு எதுவித மீட்சியுமின்றி கசப்பான எதிர்காலத்தை எதிர்நோக்க வேண்டிவரும். உங்கள் புளுகுகளை யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. உங்களது முழு நேரத்தையும் பதுங்கு குழிக்குள் செலவு செய்வதால் வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதை அறியாதுள்ளீர்கள். காலம் கடப்பதற்கு முன்பு சுயநிலைக்கு வந்து யதார்த்தத்தை எதிர்நோக்குங்கள். மக்கள் 25 ஆண்டுகாலமாக உங்கள் செயற்பாடுகளை பொறுத்திருந்து பார்த்துள்ளனர். இத்தகைய துன்பத்திற்கு முடிவேயில்லையா? தயவு செய்து வெளிநாட்டில் வாழ்கின்ற உங்கள் ஆதரவாளர்கள், கண்டிக்கப்பட வேண்டிய உங்கள் நடவடிக்கைகளுக்கு பெருமையூட்டி வரும் ஊடகங்கள் ஆகியவற்றின் வழி நடத்தலை ஏற்க வேண்டாம். அவர்கள் தமது மனைவி மக்களுடன் பிற நாட்டில் நிம்மதியாக வாழ்கிறார்கள். அவர்களில் சிலர் உங்களது பெயரை நன்கு பாவித்து பெருமளவில் சொத்து சேர்த்துள்ளனர். இன்னும் பலர் உங்களது பெயரால் சேர்க்கப்பட்ட சொத்துக்களுடன் தலைமறைவாகி விட்டனர். ஆகவே அவர்களை மேலும் நம்பவேண்டாம். அனேகமானோருடைய பிள்ளைகளுக்கு தமிழில் ஒரு வார்த்தைகூட பேச முடியாது. உங்களது பெயரால் வெளிநாட்டில் தமிழ் ஊடகங்கள் நடத்துவோரும் அவ்வாறே.

கிழக்கு மாகாணத்தின் வீழ்ச்சி.

கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளியேறியது போர் தந்திரம் என்ற உங்களுடைய கூற்றை மக்கள் நம்புகிறார்கள் என்று எதிர்பார்ப்பது புத்திசாலித்தனமல்ல. உங்கள் கிழக்கு மாகாண தளபதி கருணாவின் வெளியேற்றம் உங்கள் இயக்கத்தின் முதுகெலும்பை முறித்தது மட்டுமன்றி வட மாகாணத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு வடக்கில் உங்கள் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. ஏற்பட்டிருக்கின்ற பெரும் வாய்ப்பை உங்களுக்கு எதிராக அரசாங்கம் உபயோகிக்காது என சிந்திப்பது புத்திசாலித்தனமல்ல. தயவு செய்து கிழக்கு மாகாணம் பறிபோய்விட்டது என்பதையும் அதை மீளக் கைப்பற்றுவது என்பது பகற்கனவே என்பதையும் உணர்ந்து கொள்ளவும். கிழக்கு மாகாண மக்கள் தமது ஆதரவை உங்களுக்கு இனியொரு போதும் தர மாட்டார்கள்.

தாம், தம் உடமைகள் அத்தனையும் இழந்து முற்று முழுதாக முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் எனத் தெரிந்திருந்தும் தாம் உங்கள் பிடியிலிருந்து விடுதலையாகி விட்டோம் என மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். தாங்கள் இப்போது சுதந்திரமாக நடமாடி இழந்தவற்றை மீளக்கட்டியெழுப்பலாம் என மகிழ்ச்சியடைகின்றார்கள். அதிகமான வீடுகள் ஒன்றில் முற்றாக அல்லது பகுதியாக சேதமடைந்திருந்தும் அவை உங்கள் எறிகணை தாக்குதல்களால் பாதிக்கப்பட்டனவா அல்லது அரச படைகளின் எறிகணை குண்டு வீச்சால் பாதிக்கப்பட்டனவாக இருந்தாலும் அதற்குரிய முழுப் பொறுப்பையும் நீங்களே ஏற்க வேண்டும். ஏனெனில் மக்களை கேடயமாக பாவித்து மக்கள் மத்தியில் இருந்து இராணுவத்தை தாக்கியதால் ஏற்பட்ட விளைவே என மக்கள் அறிவார்கள். பொறுப்பற்ற முறையில் கண்ட இடமெல்லாம் நிலக்கண்ணி வெடிகளை விதைத்து பொது மக்களுக்கு உயிரழிவுகளையும், அங்கவீனர்களாகவும் ஆக்கி பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள். கால்நூற்றாண்டு காலமாக உங்களது சுதந்திரப் போராட்டம் கசப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. வடக்கிலும் இதேநிலை ஏற்பட முன்பு உங்களது ஆக்கிரமிப்பு மனப்பான்மையையும், நிலைப்பாட்டையும் மாற்றி ஆயுதங்களை வீசி எறிந்துவிட்டு, வன்முறையற்ற அணுகுமுறையை மக்கள் மீது பிரயோகிக்க உங்கள் போராளிகளை பழக்கியெடுக்க வேண்டும். நீங்கள் யுத்தத்தை நிறுத்தி ஆயுதங்களை வீசியெறியும் மறுகணமே அரசும் யுத்தத்தை நிறுத்துவதைவிட வேறு வழியில்லை. தினம் தினம் பெருமளவில் பலியாகும் உங்கள் இளம் போராளிகள் மீது ஏதாவது அனுதாபம் இருக்குமாயின் தயவு செய்து உடனடியாக ஒருதலைபட்சமாகவேனும் யுத்தத்தை நிறுத்தி உங்களால் பலாத்காரமாக யுத்தகளத்திற்கு சேர்க்கப்பட்ட ஏழைப் பெற்றோரின் அப்பாவி பிள்ளைகளை காப்பாற்றுங்கள்

வட மாகாண முஸ்லீம்கள்

வடக்கே வாழ்ந்த முஸ்லீம்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நான் ஞாபகமூட்டத் தேவையில்லை. மிகக் குறுகிய கால அவகாசத்தில் அவர்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தமது அசையும், அசையா ஆதனங்கள் அத்தனையையும் கைவிட்டு வெறும் 500 ரூபாவுடன் சென்றனர். 17 ஆண்டுகளுக்குப் பின் இன்றும் அவர்கள் ஏறக்குறைய 150 அகதிகள் முகாம்களில் தென்னிலங்கையில் சோர்வுடன் வாழ்கின்றார்கள். அவ்வாறு அவர்களுக்கு செய்தமைக்கு நீங்கள் வருத்தம் தெரிவிக்கவும் இல்லை. அவர்களை தத்தமது வீடுகளில் மீண்டும் குடியேற அழைப்பு விடுக்கவுமில்லை. இத்தகையவொரு நிலைமையை உருவாக்கியதன் பின்னர் சர்வதேச சமூகத்துக்கு நீங்கள் குற்றமற்றவர் என்பதை எவ்வாறு நிரூபிப்பீர்கள்

சர்வதேச சமூகத்தின் தலையீடு

சர்வதேச சமூகம் சுயநல நோக்குடன்தான் எமது இனப்பிரச்சனையில் தலையிட்டது என்ற உங்களது ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. தமது தேவைகளை முன்னெடுப்பதிலேயே அக்கறை காட்டுகிறார்கள் என குற்றம் சாட்டுகிறீர்கள். கணக்கிலடங்காத உதவிகளை தந்த சர்வதேச சமூகத்துக்கு நீங்கள் காட்டுவது நன்றியல்ல. சில நாடுகளில் இருந்து நீங்கள் நிதியுதவியோடு வேறு பல உதவிகளையும் பெற்றுள்ளீகள் என்பதையும் எவ்வாறு சில நாடுகளை சங்கடப்படுத்தியும், மன உளைச்சலை ஏற்படுத்தியும் உள்ளீர்கள் என்பதையும் உலகம் அறியும். எந்தநாடு எமது நாட்டிடமோ அல்லது உங்களிடமோ எதை பெற விரும்புகிறது என்பதை கூற முடியுமா? இது உங்கள் விரக்தி நிலைமையை உலகுக்கு காட்டுவதாக தோன்றவில்லையா?

நான் அறிந்த வகையில் ஒவ்வொரு நாடும் உங்களாலும்; உங்கள் போராளிகளாலும் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட துன்ப துயரங்கள் பற்றி அக்கறை கொண்டுள்ளன. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் மலாயர்கள், பறங்கியர் மற்றும் சிறு இன குழுக்கள் யாவரும் தவறாமல் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ஒவ்வொருவரும் நாட்டு சமாதானத்தையும் சக வாழ்வையும் கொண்டுவர விரும்புகின்றனர். இலங்கைக்கான ஜப்பானிய விசேட சமாதானத் தூதர் 15 தடவை நம் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். உங்களுடைய இயக்கம் ஒரு படு பயங்கரமான ஒன்று என்பதையும் அது முற்றுமுழுதாக அழிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் அறிவர். இருப்பினும் அவர்கள் இலங்கை அரசு உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றே வற்புறுத்தி வருகின்றனர். அவர்கள் உங்களுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்று சில உள்ளுர் தலைவர்கள் குற்றம் சுமத்தி அவர்களை மனச் சங்கடப்படுத்தியது நீங்கள் அறியாததல்ல. அரசு கூட அத்தகைய சில அரசுகளையும், சில அரச சார்பற்ற நிறுவனங்களையும் குற்றஞ்சாட்டியுள்ளது. நான்கூட அத்தகையவொரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளேன். நீங்கள் ஒரு தனிநபரேயன்றி எந்த அரசும் மரியாதை செலுத்தும் அளவுக்கு எந்தவொரு நாட்டினதும் தலைவரல்ல. உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை மீட்க வேண்டிய தார்மீக கடமை சர்வதேச சமூகத்துக்கு உண்டு. சர்வதேச சமூகத்துக்கு எதிராகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராகவும் உங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களை விடுவிக்க அவர்கள் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது எனது குற்றச்சாட்டாகும். உங்களாலும் உள்ளுர் சில தலைவர்களாலும் ஏறபடுத்தப்பட்ட அவமானங்களுக்கும் சங்கடங்களுக்கும் அவர்கள் நட்டஈடு கேட்கவில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் நாட்டில் அமைதியும், சகஜவாழ்வுக்கு திரும்ப வேண்டும் என்பது மட்டுமே.

இந்தியாவின் பங்களிப்பு

நாம் அனைவரும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதால் அந்நாட்டிற்கு எம்மீது அக்கறை இருப்பதோடு. ஒரு முக்கிய பங்கு வகிக்க வேண்டிய கடமையும் உண்டு. இந்தியா ஒரு பெரிய நாடு. சனத்தொகையில் 2வது இடத்தை கொண்டுள்ளது. 22மைல் நீளம் கொண்ட தொடுவாயால் பிரிக்கப்பட்டுள்ளமையால் இலங்கைக்கு கஷ்டம் ஏற்படுகின்ற நேரமெல்லாம் உதவிக்கு விரைந்து வரவேண்டிய தார்மீக கடமை உண்டு. அதை பல தடவைகள், உதாரணமாக வெள்ளம், புயல், சுனாமி, உள்ளுர் கிளர்ச்சி போன்றவை ஏற்பட்ட போதெல்லாம் அதை நிரூபித்துள்ளது. சரியோ பிழையோ இந்தியா தலையிட்டு இலங்கைப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை பேச்சுவார்த்தை மூலம் ஏற்படுத்தியது. இந்தியாவின் தலையீடு தமிழ் தலைமை வேண்டுகோளுக்கமைய ஏற்படுத்தப்பட்டு அமுல்படுத்துவதற்கு இலகுவாக இந்தியாவே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. 2004ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் போல் அல்லாமல் தமிழர்கள் பெரும்பான்மையாக கொண்ட தொகுதியில் ஒன்றைத் தவிர அத்தனை தொகுதிகளையும் வென்றெடுத்த தமிழர் விடுதலைக் கூட்டணி இந்தியாவுக்கு அந்த வேண்டுகோளை விடுத்தது. ஒரு தொகுதியை மட்டும் 500 வாக்குகளால் இழந்திருந்தோம். உங்கள் கொடூரத்தை நீங்கள் காட்டாது இருந்திருந்தால் 1989ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டு மக்கள் அமைதியாக வாழ்ந்திருப்பர். எமது நாடும் தீவிர முன்னேற்றமடைந்து சகல ஆசிய நாடுகளையும் பின் தள்ளி முன்னணி நாடாக வளர்ந்திருக்கும். இன்றைய நிலைமைக்கு காரணமாக இருந்தவர் நீரே. லொறிக் கணக்காக பணத்தையும் ஆயுதங்களையும் துப்பாக்கி ரவைகளையும் அன்றைய அரசிடம் பெற்று அரசின் ஒட்டுப்படையாக செயற்பட்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை செயற்படுத்த விடாது குழப்பியவர் நீரே. இன்று ஜனநாயக பாதைக்கு திரும்பியுள்ள பல்வேறு தமிழ் குழுக்களின் உறுப்பினர்கள் அனேகரை அழித்தொழித்து விட்டு இன்று நீங்கள் 1989 இல் நடந்து கொண்ட விதத்தை மறந்து, அவர்களை ஒட்டுப்படை என்று நகைப்புக்கிடமாக விமர்சிக்கின்றீர்கள். இந்திய அமைதிகாப்பு படையை மாலை அணிவித்து வரவேற்ற நீங்களே பின்பு சிறீலங்கா அரசின் ஒட்டுப்படையாக செயற்பட்டு 1200 இற்கு மேற்பட்ட இந்திய அமைதி காப்பு படை வீரர்களை கொன்று ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய ஜவான்களின் விதவைகளை உருவாக்கினீர்கள். இந்திய அமைதி காப்புப் படையை சில துன்பகரமான சம்பவங்களில் திட்டமிட்டு நீங்களே ஈடுபட வைத்தீர்கள். அவர்கள் சமாதானத்தை நிலைநாட்ட அன்றி போராட வரவில்லை. இந்திய அமைதிகாப்புப்படையை சேர்ந்தவர்கள் அனைவரும் காந்தியவாதிகள் அல்ல என்பதை உணர வேண்டும். அவர்கள் மனிதர்கள் அவர்களுடைய பொறுமைக்கும் எல்லையுண்டு. அவர்களை சில கொடிய சம்பவங்களில் ஈடுபட தூண்டியது உங்களது திட்டமிட்ட செயலேயாகும்.

உங்கள் போராளிகள் சீக்கிய போராளிகளின் தலையை வெட்டி அவர்களின் தலைமுடியில் தூக்கியிருக்கிறார்கள். கோழைத்தனமாக அவர்களை தாக்கி கொன்றுவிட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் ஓடி ஒளிந்தமையால் இனந் தெரியாமல் சில வைத்தியர்கள் கொல்லப்பட்டமைக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டும். பராசூட்டில் வந்திறங்கிய இந்திய அமைதி காப்புப் படையை மறைந்திருந்து சுட்டுத்தள்ளியவர்கள் உங்கள் போராளிகள். இத்தகைய தூண்டுதல் சம்பவங்கள் இந்திய அமைதிகாப்பு படைக்கு அபகீர்த்தி ஏற்படுத்த உங்கள் போராளிகளால் திட்டமிட்டு மேற்கொண்ட சம்பவங்களாகும். தமிழ் நாட்டில் தவறான பிரச்சாரம் செய்யும் சில தமிழ் தலைவர்களுக்கு அசம்பாவிதத்தால் சில நூறு தமிழர்கள் கொல்லப்பட்டமையே உண்மை என்பதையும் 7,000 பேர் கொல்லப்பட்டமை என்பது மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கை என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

இந்திய அமைதி காப்புப்படை மூன்று தடவை உங்களை சுற்றி வளைத்தும் உங்களை பிடிக்காது தப்ப விட்டமைக்கு ஒரேயொரு காரணம் தீர்வு விடயத்தில் உங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காகவே என்பதை உலகுக்கு நீங்கள் ஏன் தெரியப்படுத்தக் கூடாது. அதற்கு இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களை தற்கொலை குண்டுமூலம் உருக்குலைய வைத்து நன்றி உணர்வை காட்டியுள்ளீர்கள். உங்களை பிடிக்க வேண்டுமாக இருந்திருந்தால் இந்தியாவுக்கு எவ்வளவு நேரம் ஆகும்.? இந்தியா உம்மை தம்மிடம் ஒப்படைக்க கோரினால் இலங்கை அரசுக்கு உம்மை பிடிக்க எவ்வளவு நேரமாகும்?. இந்த விடயத்தில் இரு நாடுகளும் பாராமுகமாக இருப்பது நாட்டின் பிரச்சினை தீர்வுக்கு இச் செயல் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவே என்பதை தயவு செய்து உணர்ந்து கொள்ளவும். தமிழ் நாட்டு சட்டசபை உங்களை நாடு கடத்தி தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசிடம் கோரவேண்டுமென மத்திய அரசை கேட்டுள்ளது என்பதை அறிவீர்களா?

இனி செய்யவேண்டியவை

1990 களில் இருந்த பிரபாகரன் அல்ல நீங்கள். இன்று முதிர்ச்சியடைந்து நிலைமையை கணிக்கக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளீர்கள். தயவு செய்து என்னுடைய ஆலோசனையை ஏற்று உங்களது தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடவும். இந்திய முறையிலான ஒரு தீர்வை ஏற்பீராக இருப்பின் அதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். ஆச்சரியப்படக்கூடிய வகையில் இலங்கை வாழ் மக்களும் அதற்கு ஆதரவை வழங்குவர்.

இந்தக் குழப்பத்தில் இருந்து நாட்டை மீட்கக்கூடிய ஓர் ஒளிக்கீற்று தெரிகிறது. நாட்டின் பிரச்சினைக்கு தீர்வொன்றினை காண அரசு தீவிர முயற்சி மேற்கொள்கிறது. ஆனால் இந்த சூழ்நிலையில் அரசியல் சட்டத்தை திருத்த வேண்டிய மூன்றில் இரண்டு அதிகப்படியான வாக்கும் பொதுஜன வாக்கெடுப்பும் நடத்துவது முடியாது இருப்பதால் 13வது திருத்தச் சட்டத்தை முன்னோடியாக அமுல்படுத்த உத்தேசிக்கப்படுவதோடு சர்வகட்சி பிரதிநிதிகள் குழு நிரந்தர தீர்வு காணும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இத் தீர்வு தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்றதாகவோ அன்றி போதுமானதாகவோ நான் கூற வரவில்லை. தனி நாட்டுக் கோரிக்கையை கைவிட்டால் பலரின் சிந்தனையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு நியாயமான, அனைவருக்கும் ஏற்புடையதான ஒரு தீர்வைக் காணக்கூடிய சாதகமானதொரு சூழல் ஏற்படும். யுத்தத்தை நிறுத்தி இரு பகுதியிலும் பல உயிர்களை காப்பாற்றும்படி நான் வேண்டுகிறேன். இடைக்காலத் தீர்வை தயவு செய்து ஏற்க சம்மதித்து நாட்டுக்கும் மக்களுக்கும் அமைதியை கொண்டுவர வேண்டும். நீங்கள் இடைக்காலத் தீர்வை ஏற்கும் பட்சத்தில் அன்றி ஒரு தேர்தல் நடத்த வேண்டுமென கோரினாலும் கூட நான் முடிந்தவரை முயற்சித்து உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் பொறுப்புமிக்க பதவிகளை பெற்றுத்தருவேன்.

உங்களது போராளிகள் உட்பட அனைவரும் சமாதானத்தை விரும்புகின்றனர். நான் உங்களை சந்தித்து பேச விரும்புகின்றேன் என்பதை தயவு செய்து அறிந்து கொள்ளவும். தயவு செய்து என்னை ஒரு விரோதியாக கணிக்க வேண்டாம். நீங்கள் ஆயுதங்களை கைவிட்டு தனிநாட்டுக் கோரிக்கையையும் கைவிட்டால் நாடு உங்களை மன்னிக்கத் தயாராக உள்ளது. அதன் பின் அனைவரும் ஒன்றிணைந்து நியாயமானதோர் தீர்வை காண முடியும்

உங்கள் பதிலை அறியத்தரவும்


இப்படிக்கு
அன்புடன்



வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ