பத்திரிக்கையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பாக தலைவர் ஆனந்தசங்கரி அவர்களின் அறிக்கை

வீரகேசரி (07.01.2008) பத்திரிக்கையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பாக தலைவர் ஆனந்தசங்கரி அவர்களின் அறிக்கை.
08-01-2008

தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர்கள் நாங்கள் அல்ல.
புலிகளால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் நீங்களே.

தமிழர்களால் நிராகரிக்கபட்ட தமிழ் தலைவராக என்னை குறிப்பிட்டு தமிழகத்தில் நான் கூறிய கருத்துக்களுக்கு கனவுலகில் மிதந்து கொண்டு வீராப்பு பேசும் தம்பி ஜெயானந்தமூர்த்திக்கு வரலாற்றை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

ஜனநாயக முறையில் நடைபெற்ற கடைசித் தேர்தலில் 36,000 வாக்குகளைப் பெற்று ஒன்பது பேரில் முதன்மை உறுப்பினராக நான் தெரிவு செய்யப்பட்டேன். தம்பி ஜெயானந்தமூர்த்தியைப் போல் சத்தியமூர்த்தி, கிங்ஸ்லி இராஜநாயகம் போன்றோரை பல்லக்கில் வைத்து பரலோகம் அனுப்பிவிட்டு குறுக்குப் பாதையால் பாராளுமன்றம் சென்றவன் நான் அல்ல. காலத்துக்குக் காலம் மக்களின் பின்னால் மறைந்திருந்து வீராப்பு பேசி இன்று பல்லாயிரக்கணக்கான மக்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு இந்தியாவின் பிரதிநிதியைப் போல் பேசுவது விந்தையிலும் விந்தை.

ஏந்த அரசுக்கும் நான் முண்டு கொடுத்தவன் அல்ல. கைக்கூலியாக செயற்படுவது தம்பி ஜெயானந்தமூர்த்தியே அன்றி நான் அல்ல. 2004ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் மோசடி மூலமாகவும் புலிகளின் அடாவடித்தனத்தாலும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரும் வென்றனர். ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள்,உள்ளுர், சி.எம்.வி., பெப்ரல் போன்ற அமைப்புக்கள் இந்த தேர்தல் நடவடிக்கையை கண்டித்ததோடு வடக்கு கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையாளருக்கு சிபாரிசு செய்தமையை மறந்து என்மீது களங்கம் கற்பிப்பது வேடிக்கையானது. அன்றைய ஐ.நா செயலாளர் திரு. கொபி அனான் உட்பட பல்வேறு நாட்டுத் தலைவர்களும் வடக்கு கிழக்கில் நடைபெற்ற தேர்தலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உலகறிந்த உண்மையாகும். இந்தியப் பிரதமர் கௌரவ மன்மோகன் சிங் அவர்கள் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருவதாக யாருக்கும் எப்போதும் கூறவில்லை. ஆகவே தம்பி ஜெயானந்தமூர்த்தியின் கற்பனைகளில் எம்மால்தான் அவர் வரவில்லை என்பதும் ஒன்றாகும்.

தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் மக்களை புறக்கணித்துவிட்டு பெரும்பான்மை மக்கள் மத்தியில் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டு பேரினவாதத்தைப் பற்றி பேசுவதும் தம்மை மறந்து கைக்கூலிகளென பேசுவதையும் தம்பி ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தவிர்த்துக் கொள்வது நன்று. அரசியல் வாழ்வில் 50 ஆண்டுகள் சுய சிந்தனையுடன் செயற்பட்டு வந்தேனே அன்றி நான் யாருக்கும் எடுபிடியாகவோ, கைக்கூலியாகவோ செயற்பட்டது கிடையாது. மறைந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு நான் கொடுத்த பதில் ஞாபகம் இருக்குமென நினைக்கின்றேன். கப்பம், மிரட்டல் ஆட்கடத்தல், தடுத்து வைத்தல், சித்திரவதை செய்தல், கொலைகள் ஆகியவை பற்றி பேசும் தம்பி ஜெயானந்தமூர்த்தி தனது எஜமானர்களின் பிரதேசத்தில் இவற்றைவிட வேறு என்ன நடக்கின்றது என்பதை மட்டும் அவரால் சொல்ல முடியுமா?. ஆங்காங்கே கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் நடைபெறும் இச் சம்பவங்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். ஆனால் அவற்றில் சிலவற்றுக்கு யார் பொறுப்பு என்பதை நான் அறிவேன். தினம் தினம் பலாத்காரமாக பிடிக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டு போர்முனைக்கு அனுப்பப்படும் அப்பாவி ஏழைப் பெற்றோரின் பிள்ளைகளை போர்முனையில் பலி கொடுப்பதை அவரால் தடுக்க முடியவில்லை. வீராப்பு பேசி காலத்தை வீனடிக்காது தனது பிள்ளையையும் கூட்டிக்கொண்டு போர்முனைக்கு செல்வதே உத்தமர்கள் செயலாகும்.

இந்தியாவும், குறிப்பாக தமிழகமும் இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறையோடு செயற்பட்டு தீர்விற்கு ஒத்துழைக்குமே அன்றி அவர் கூறும் பிரமுகர்கள் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.



வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ