தமிழர்களும் ஆயுதக்குழுக்களும்

23.05.2009

தமிழர்களும் ஆயுதக்குழுக்களும்

தமிழர்களின் விடுதலைக்காக தமிழ் இளைஞர்களினால் உருவாக்கப்பட்டதே ஆயுத இயக்கங்கள். ஆனால் இந்த ஆயுதக்குழுக்களின் இன்றைய செயற்பாடுகள் மிக கவலையளிக்கின்றது. யாருக்கு எதிராக போராட தொடங்கினார்களோ, அவர்களின் ஆதரவில் இருந்து கொண்டு கப்பம், ஆட்கடத்தல், கொள்ளை, கொலை, கொலைமிரட்டல் போன்ற மிகவும் கீழ்தரமான செயற்பாடுகளை செய்வதன் மூலம் தமிழ் மக்களை ஆயுத அடக்குமுறைக்கு அடிபணிய வைக்க நினைக்கின்றார்கள்.

ஓரு தொலைபேசி அழைப்பின் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை அவர்களின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடும் அளவிற்கு தமிழ் மக்கள் மீது ஆயுத அடக்குமுறை கலாச்சாரம் கட்டவழ்த்து விடப்பட்டுள்ளது. இப்பொழுது மன்னார் பகுதிகளில் இந்த செயற்பாடு அதிகரித்துள்ளது.

மிக பெரிய அவலத்தில் இருந்து தப்பி வந்து நலன்புரி நிலையங்களில் சுகந்திரமான நடமாட்டம் இன்றி நிர்பந்தத்தில் வாழும் சிறுவர்களை கூட இவர்கள் கடத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதை யாரிடம் முறையிடுவது?

இந்த ஆயுதக்குழுக்களை அரசாங்கம் ஊக்குவிப்பதற்கான காரணம், தனது செயற் திட்டங்களை எதிர்புகள் இன்றி நடமுறைப்படுத்துவதற்கு. அரசாங்கத்திற்கு எதிராக இவர்கள் செயற்படின் இவர்களது இருப்பிடம் கேள்விக்குரியதாகிவிடும். என்னதான் இவர்கள் செய்தாலும் என்றும் இவர்களை குற்றவாளியாகவே தமிழ் மக்கள் கருதுவார்கள்.

விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்திய ஜனாதிபதி, மற்றைய ஆயுதக்குழுக்களின் நடவெடிக்கையை இன்று வரைக்கும் கட்டுப்படுத்த விரும்பவில்லை என்பது மிக கவலையான விடயம்.

எந்த ஒரு இனத்தையும் நீண்ட நாட்களுக்கு ஆயுத அடக்குமுறைக்கு அடிபணிய வைக்க முடியாது என்பது வெகு விரைவில் இவர்களுக்கு நன்கு புரியும்.

தி. சுரேஷ்.