பராமரிப்பின்றி தனிமையில் வாடும் முதியோர்கள்

29.05.2009
மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,
இலங்கை ஜனாதிபதி.

அன்புடையீர்,

பராமரிப்பின்றி தனிமையில் வாடும் முதியோர்கள்

நான் முன்னர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இதுவரை பல முதியோர்கள் பராமரிக்கக்கூடியவாறு உறவினர்கள் பொறுப்பேற்பதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது, இருந்தபோதும் இன்னும் பலர் தனிமையில் வாடிவருகின்றனர். தம்மை இன்னார் என்று அறிவிக்க முடியாத வயதுகடந்த நிலையும்தாண்டி அங்கு உயிர்வாழ்கின்றனர்.

இந்த நிலையில் அவர்கள் மெல்ல மெல்ல செத்துக்கொண்டிருக்கின்றார்கள். வசதி படைத்த அவர்களின் உறவினர்களும், பிள்ளைகளும் வெளிநாடுகளிலும் இலங்கையின் தூர இடங்களிலும் வசித்துவருவதாலும், அவர்களின் உறவினர்கள் இவர்கள் நிலையை அறிந்துகொள்ள இயலாமல் துயரப்பட்டுக் கொண்டுள்ளார்கள். முகாம்களில் ஒலிவாங்கியில் கொடுக்கப்படும் அறிவுறுத்தல்களும் அவர்கள் செவியில் ஏறுவதில்லை. உணவினை பெற வரிசையில் நிற்க இயலாமல் படும் துன்பம் சொல்லில் அடங்காது. எனவே அவர்கள் தொடர்பான பெயர் விபரங்களை உடன் வெளியிடுவதுடன் தயவு செய்து தனியாக விடப்பட்டவர்களை ஒருங்கிணைக்குமாறும், தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது உங்களுக்கு இந்த கடிதத்தினை எழுதிக்கொண்டிருக்கும் போதும் எனக்குக் கிடைத்த தகவலின்படி தனது மைத்துனரை இராமநாதன் முகாமில் சந்திக்க பிரான்சில் இருந்து வந்த அவரின் 55 வயதுடைய வைரமுத்து செல்வராசா என்பவர் 27.05.2009இல் கொழும்பில் இறந்துவிட்டார் என்பதனையும் தங்களுக்கு வேதனையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இது போன்ற சம்பவங்கள் நிறைய நடந்து கொண்டிருக்கின்றன. இவை துயரப்படும் மக்களின் துயரத்தை மேலும் மேலும் அதிகரிப்பனவாகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 66 இனங்காண இயலாத வயோதிபரின் சடலங்கள் வவுனியா, பூந்தோட்டம் மயானத்தில் அனாதை பிணங்களாக புதைக்கப்பட்டன. இதுபோன்ற சிரமங்களை தவிர்ப்பதற்கும் இவ்வாறானவர்கள் உடன் அடையாளம் காண ஏற்பாடு செய்யுமாறும், பிரேத அறை ஒன்றை உடன் ஏற்பாடு செய்யுமாறும் நான் உங்களுக்கு முன்னர் விடுத்த வேண்டுகோளையும் தயவுகூர்ந்து கவனத்தில் எடுக்குமாறும் பணிவுடன் வேண்டிநிற்கிறேன்.

நன்றி.

தங்கள் உண்மையுள்ள

வீ.ஆனந்தசங்கரி
தலைவர் - தமிழர் விடுதலைக் கூட்டணி