குரூரத்தனமான கொலைகள்

குரூரத்தனமான கொலைகள் மற்றும் தற்கொலை தாக்குதல் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக விடுத்துள்ள கண்டன அறிக்கை - 30.11.2007

பிரபாகரனின் மாவீரர் தின உரை நிகழ்ந்து சில மணித்தியாலங்களுக்குள் ஊனமுற்ற ஒரு தற்கொலை குண்டுதாரிப் பெண்ணை, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை இலக்கு வைத்து புலிகள் அனுப்பியிருந்தனர். இச் சம்பவத்தில் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பொதுஜன தொடர்பு அதிகாரியான முதியவர் ஸ்டீபன் பீரிஸ் (66) படுகொலை செய்யப்பட்டார். அவரது மெய் பாதுகாவலர்கள் அடங்கலாக நால்வர் படுகாயமடைந்தனர்.

காலை பொழுதில் நிகழ்ந்த இத் தாக்குதலின் பின்னர் மாலை வேளையில் சனசந்தடிமிக்க நுகேகொட துணிக்கடை தொகுதியொன்றில் பார்சல் குண்டொன்றை வெடிக்க வைத்தனர். 18 பொது மக்கள் உடனடியாகவே உயிரிழந்தனர். 40 பேர்வரை கடுமையான காயங்களுக்குள்ளாயினர். இதில் கடைக்குப் பொருட்கள் வாங்க வந்தோர், வீதியால் சென்று கொண்டிருந்தோர், கடை ஊழியர்கள், பொலிஸ்காரர், பஸ்ஸில் வாகனங்களில் பயணம் செய்தோர், மாணவர்கள், பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்தோர் என பலரும் கொல்லப்பட்டனர்.

வன்னியில், கிளிநொச்சியின் மையத்தில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஐயங்குளத்தில் நவம்பர் 27ம் திகதியன்று பாடசாலை மாணவர்கள் உட்பட 11 பேர் கிளேமோர் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டனர்.

நவம்பர் 26 இல் அனுராதபுர மாவட்டத்தில் சேனைப் பயிர் செய்கை செய்யும் ஒரு பெண் உட்பட விவசாயிகளான நால்வர் கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவ்வகைப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் ஜனநாயக சமூகத்தில் சகித்துக் கொள்ளப்பட முடியாதவை. இத்தகைய தாக்குதல்கள் இந்த நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு எவ்விதத்திலும் உதவாது.

தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி- (பத்மநாபா) ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்த நாம் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம். படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்